செஞ்சூரியன் : தென்னாபிரிக்கா அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர இளம் வீரர் திலக் வர்மா 51 பந்துகளில் அபாரமாக சதம் விளாசி இருக்கிறார். நான்கு போட்டிகள் கொண்ட இந்த டி20 தொடரில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற்றிருக்கும் நிலையில் இந்த போட்டி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்பட்டது.
இதனை அடுத்து டாஸ் வென்ற தென்னாபிரிக்க அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. தொடக்க வீரராக களமிறங்கிய சாம்சன் மீண்டும் தொடர்ந்து இரண்டாவது முறையாக டக் அவுட் ஆகி ரசிகர்களை வெறுப்பேற்றினார்.

இதனை அடுத்து இரண்டாவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த அபிஷேக் ஷர்மா மற்றும் திலக் வர்மா ஆகியோர் அபாரமாக விளையாடி ரன்களை சேர்த்தனர். தொடர்ந்து அதிரடி காட்டிய அபிஷேக் ஷர்மா 24 பந்துகளில் அரை சதம் அடித்தார். இதில் 5 சிக்சர்கள் மூன்று பவுண்டரிகள் அடங்கும். அபிஷேக்சர்மா ஐம்பது ரன்களில் ஆட்டம் இழக்க பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கேப்டன் சூரியகுமார் யாதவ் ஒரு ரன்னில் வெளியேறினார்.
ஹர்திக் பாண்டியா பெரிய ஷாட் ஆட முயற்சித்து 18 ரன்களில் வெளியேறினார். ஒரு பக்கத்தில் இந்திய அணி வீரர்கள் ரன்கள் எடுக்க தடுமாறினாலும், மறுமுனையில் திலக் வர்மா தென்னாப்பிரிக்காவின் பந்துவீச்சை அல்வா போல் எதிர்கொண்டு ரன்களை குவித்தார். திலக் வர்மாவை ஆட்டம் இழக்க வைக்க தென்னாப்பிரிக்கா எடுத்த எந்த முயற்சியும் பலன் அளிக்கவில்லை.
தொடர்ந்து சிறப்பாக விளையாடிய திலக் வர்மா 51 பந்துகளில் தன்னுடைய முதல் சதத்தை பூர்த்தி செய்தார். இறுதியில் அறிமுக வீரராக களம் இறங்கிய ராமந்தீப் சிங் ஒரு சிக்சர் ஒரு பவுண்டரி என ஆறு பந்துகளில் 15 ரன்கள் எடுக்க திலக் வருமா கடைசிவரை ஆட்டமிழக்காமல் 56 பந்துகளில் 107 ரன்கள் குவித்தார். இதில் எட்டு பவுண்டரி, ஏழு சிக்ஸர்கள் அடங்கும்.
இதில் அவருடைய ஸ்ட்ரைக் ரேட் 191 என்ற அளவில் இருந்தது. இந்திய அணி 230 ரன்களுக்கு மேல் குவிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கடைசி ஓவர் வீசிய மார்க்கோ யான்சன் வெறும் நான்கு ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்தார். இதனால் ஐபிஎல் அணிகளின் ரேடாரில் மார்க்கோ யான்சன் முக்கிய வீரராக இருப்பார். இதன் மூலம் இந்திய அணி ஆறு விக்கெட் இழப்பிற்கு 219 ரன்கள் எடுத்தது.