ஜொகன்னஸ்பர்க்: தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் இந்திய அணியின் இளம் வீரர் திலக் வர்மா 41 பந்துகளில் சதமடித்து சாதனை படைத்துள்ளார். அதேபோல் டி20 கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக 2 சதங்களை விளாசிய 2வது இந்திய வீரர் என்ற பெருமையையும் திலக் வர்மா பெற்றுள்ளார்.
தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான 3வது டி20 போட்டியில் இந்திய அணியின் இளம் நட்சத்திர வீரர் திலக் வர்மா அபாரமாக விளையாடி சதம் விளாசினார். சிறப்பாக விளையாடிய திலக் வர்மா 56 பந்துகளில் 7 சிக்ஸ், 8 பவுண்டரி உட்பட 107 ரன்களை விளாசி ஆட்டநாயகன் விருதை தட்டி சென்றார். இந்தப் போட்டிக்கு முன் கேப்டன் சூர்யகுமாரிடம் நம்பர் 3 பேட்டிங் வரிசையில் களமிறங்க வாய்ப்பு வேண்டும் என்று கேட்டிருந்தார்.

அதற்கேற்ப நம்பர் 3ல் களமிறங்கி சதம் விளாசியதால், இன்றைய ஆட்டத்தில் திலக் வர்மா நம்பர் 3 பேட்டிங் வரிசையில் களமிறங்கும் வாய்ப்பு கிடைத்தது. ஏற்கனவே அபிஷேக் சர்மா - சஞ்சு சாம்சன் இருவரும் முதல் விக்கெட்டுக்கு 73 ரன்கள் சேர்த்திருந்தனர். அப்போது அபிஷேக் சர்மா 36 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேற நிலையில், திலக் வர்மா களம் புகுந்தார்.
முதல் 6 பந்துகளில் 4 ரன்கள் மட்டுமே சேர்த்திருந்த அவர், மஹாராஜ் வீசிய ஓவரில் அடுத்தடுத்து 2 சிக்சர்களை பறக்கவிட்டு அதிர்ச்சி கொடுத்தார். அப்போது முதல் தென்னாப்பிரிக்கா ஃபீல்டர்களால் திலக் வர்மாவின் ஷாட்களை வேடிக்கை மட்டுமே பார்க்க முடிந்தது. ஒவ்வொரு ஓவரிலும் சிக்ஸ், பவுண்டரி என்று வேற லெவலில் வெளுத்து கட்ட, 22 பந்துகளில் அரைசதத்தை எட்டினார்.
அதன்பின் திலக் வர்மா தனது ஆட்டத்தை உச்சத்திற்கு கொண்டு சென்றார். மார்க்ரம் வீசிய ஒரே ஓவரில் 4, 6, 6, 4 என்று 20 ரன்களை விளாச, கோட்ஸி வீசிய ஓவரில் ஜஸ்ட் மிஸ்ஸில் தப்பித்தார். பின்னர் பவுண்டரி, சிக்சரிலேயே ரன்களை குவித்து வந்த திலக் வர்மா, 90 ரன்களை கடந்து பேட்டிங் ஆடிக் கொண்டிருந்தார். இதனால் மீண்டும் சதம் அடிப்பாரா என்று பார்க்கப்பட்டது.
தொடர்ந்து 19 ஓவரில் திலக் வர்மா 2 ரன்களை எடுத்து தனது 2வது டி20 சதத்தை நிறைவு செய்தார். இதன் மூலமாக டி20 கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக 2 சதங்களை விளாசிய 2வது இந்திய வீரர் என்ற பெருமையை திலக் வர்மா பெற்றுள்ளார். இதன் மூலமாக இனி நம்பர் 3 பேட்டிங் வரிசை திலக் வர்மாவுக்கு என்று உறுதியாகியுள்ளது.
41 பந்துகளில் 9 சிக்ஸ், 6 பவுண்டரி உட்பட சதம் விளாசி அசத்தியுள்ளார். கடைசி வரை களத்தில் இருந்த திலக் வர்மா 47 பந்துகளில் 10 சிக்ஸ், 9 பவுண்டரி உட்பட 120 ரன்களை விளாசி அசத்தியுள்ளார். இதனால் ரசிகர்கள் இந்திய அணிக்கு அடுத்த சுரேஷ் ரெய்னா கிடைத்துவிட்டதாக கொண்டாடி வருகின்றனர்.