அகமதாபாத்: டி20 உலககோப்பை சூப்பர் 8 சுற்றில் தென்னாப்பிரிக்காவிடம் 76 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது இந்திய அணிக்கு தற்போது கடும் நெருக்கடியை சந்தித்துள்ளது. இதனால், இந்தியாவுக்கு எஞ்சியுள்ள 2 போட்டிகளும் வாழ்வா சாவா என்ற கட்டத்தில் உள்ளது. இந்த சூழலில் இந்திய அணியில் தற்போது பல கேள்விகள் ஏற்பட்டுள்ளது.
இந்திய அணியில் உள்ள குறைகள் குரூப் ஸ்டேஜ் போட்டிகளிலேயே வெளிப்பட்டன. குறிப்பாக, பவர்பிளேயில் ஆஃப்-ஸ்பின்னர்களுக்கு எதிராக தடுமாற்றம், மோசமான தொடக்கத்தை சரிசெய்ய மிடில் ஆர்டரின் தடுமாற்றம், வேகப்பந்து வீச்சாளர்கள் பந்தின் வேகத்தைக் குறைக்கும் போது பவுண்டரிகளை அடிக்க சிரமம் போன்ற பிரச்னைகள் இதில் அடங்கும்.

பெரும்பாலான சிக்கல்கள் பேட்டிங் வரிசையில் தான் ஏற்பட்டுள்ளது. தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 187/7 ரன்கள் விட்டுக் கொடுத்தாலும், 'பெல்டர் பிட்ச்' என வர்ணிக்கப்பட்ட மைதானத்தில் அது 'சாதாரண' ஸ்கோராக கருதப்பட்டது. சூப்பர் 8 சுற்றில் ஒரு தோல்வி அணியை வெளியேற்றும் என்பதால், ரசிகர்கள் கோபத்தில் உள்ளனர்.
அணிக்கு தேவையான மாற்றம் டாப் ஆர்டரில் தான் தொடங்க வேண்டும். இந்தத் தொடரில் தொடக்க ஜோடியின் அதிகபட்ச ஸ்கோர் நமீபியாவுக்கு எதிராக எடுத்த 25 ரன்கள் மட்டுமே, அதுவே அவர்களது ஒரே இரட்டை இலக்க ஸ்கோர். இதில் பெரும்பாலான ரன்களை சஞ்சு சாம்சன் எடுத்தார். அபிஷேக்-இஷான் கிஷன் ஜோடியைப் பிரிப்பதற்கு இது போதுமான காரணமாகும்.
டி20 புள்ளிவிவரங்கள் இடது கை பேட்ஸ்மேன்கள் சிறந்தவர்கள் எனக் காட்டினாலும், இந்திய அணியின் டாப்-3 பேட்ஸ்மேன்களும் இடது கை ஆட்டக்காரர்கள் என்பதால், ஆஃப்-ஸ்பின்னர்களுக்கு எதிராக சிக்கலில் மாட்டுகின்றனர். உலகின் சிறந்த டி20ஐ பேட்ஸ்மேன் என்ற நிலையில், அபிஷேக் சர்மா இருந்தாலும், அவர் தடுமாறி வருகிறார். இதே போன்று திலக் வர்மாவும் தடுமாறி வருகிறார்.
இதுவரை அவர் எடுத்த 25, 25, 25, 31, 1 என்ற ஸ்கோர்களுக்குப் பிறகு, அவரை மூன்றாம் இடத்தில் தொடர்ந்து விளையாட வைக்க முடியாது. ஆஃப்-ஸ்பின்னர் யுக்தியை முறியடிக்க, சாம்சன்-அபிஷேக் மீண்டும் தொடக்க வீரர்களாக களமிறங்குவது சிறந்த மாற்று வழி என்று ரசிகர்கள் வலியுறுத்தியுள்ளனர். இதைத் தொடர்ந்து இஷான் கிஷன் மூன்றாம் இடத்தில் இறங்கலாம்.
2024 டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில், இந்தியா 4.3 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 34 ரன்கள் எடுத்திருந்தபோது, அக்சர் படேல் 31 பந்துகளில் 47 ரன்கள் குவித்து, ஆட்டத்தின் வேகத்தை மாற்றினார். ஆனால், ஞாயிற்றுக்கிழமை அகமதாபாத்தில் அதே எதிரணிக்கு எதிராக, இந்தியா 4.3 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 26 ரன்கள் எடுத்திருந்தபோது, வாஷிங்டன் சுந்தர் 11 பந்துகளில் 11 ரன்கள் மட்டுமே எடுத்தார்.
பாகிஸ்தானுக்கு எதிராக இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்திய அக்சரை, நெதர்லாந்துக்கு எதிரான கடந்த போட்டியில், 'ஓய்வெடுக்க' வைத்ததாக அணி கூறியது ஏன்? அவரை ஏன் மீண்டும் களமிறக்கவில்லை? டாஸின் போது சூரியகுமார் கூறிய யுத்திக்காக நீக்கப்பட்டார் என்று சொன்னது ஏன் என பல்வேறு கேள்விகளை ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர்.
வாஷிங்டன் சுந்தர் சிறந்த ஆல்ரவுண்டர் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் அவர் வீசிய இரண்டு ஓவர்களில் 17 ரன்கள் கொடுத்து விக்கெட் எதையும் எடுக்கவில்லை. இடது கை பேட்ஸ்மேன்களுக்கு எதிராக அவர் சிறப்பாக செயல்படுவார் என்று கூறப்படுகிறது.
எனினும், தென்னாப்பிரிக்கா அணியில் இந்தியாவை விட குறைவான இடது கை பேட்ஸ்மேன்கள் இருந்தும், அவர்கள் கேஷவ் மகாராஜ் போன்ற ஒரு இடது கை சுழற்பந்து வீச்சாளரை பயன்படுத்தினர்.உடைக்கப்படாத ஒன்றை சரிசெய்ய வேண்டிய அவசியம் இல்லை. வியாழக்கிழமை ஜிம்பாப்வேக்கு எதிரான போட்டிக்கு முன் இது சரிசெய்யப்படாவிட்டால், அது அபத்தமாக இருக்கும் என்று ரசிகர்கள் சாடியுள்ளனர்.