தர்மசாலா: இந்திய அணியின் 'மிஸ்டரி ஸ்பின்னர்' மற்றும் உலகின் நம்பர் 1 டி20 பந்துவீச்சாளரான வருண் சக்கரவர்த்தி, சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஒரு முக்கிய மைல்கல்லை எட்டி சாதனை படைத்துள்ளார். மிகக்குறைந்த போட்டிகளில் 50 விக்கெட்டுகளை வீழ்த்திய இரண்டாவது இந்தியப் பந்துவீச்சாளர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.
தர்மசாலாவில் நடைபெற்ற தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது டி20 போட்டியில் இந்தச் சாதனையை அவர் நிகழ்த்தினார். இதுவரை 32 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள வருண் சக்கரவர்த்தி, நேற்றைய போட்டியில் தென்னாப்பிரிக்க வீரர் டோனோவன் ஃபெரீராவை 'கிளீன் போல்ட்' செய்தபோது, தனது 50-வது சர்வதேச விக்கெட்டைப் பதிவு செய்தார்.

இதன் மூலம், சர்வதேச டி20 போட்டிகளில் அதிவேகமாக 50 விக்கெட்டுகளை வீழ்த்திய இந்தியர்கள் பட்டியலில் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளார். ஜஸ்பிரித் பும்ரா, அஸ்வின், புவனேஷ்வர் குமார் போன்ற சீனியர் வீரர்களை விட மிகக்குறைந்த போட்டிகளில் வருண் இந்த மைல்கல்லை எட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
குல்தீப் யாதவ் - 30 போட்டிகள்
வருண் சக்கரவர்த்தி - 32 போட்டிகள்
அர்ஷ்தீப் சிங் - 33 போட்டிகள்
ரவி பிஷ்னாய் - 33 போட்டிகள்
யுஸ்வேந்திர சாஹல் - 34 போட்டிகள்
ஜஸ்பிரித் பும்ரா - 41 போட்டிகள்
ரவிச்சந்திரன் அஸ்வின் - 42 போட்டிகள்
சர்வதேச அளவில் (முழு நேர உறுப்பு நாடுகள்), இலங்கையின் அஜந்தா மெண்டிஸ் வெறும் 26 போட்டிகளில் 50 விக்கெட்டுகளை வீழ்த்தியதே உலக சாதனையாக உள்ளது. அசோசியேட் நாடுகளில் போட்ஸ்வானா வீரர் துருவ்குமார் மைசூரியா 22 போட்டிகளில் இந்தச் சாதனையைச் செய்துள்ளார்.
இந்தப் போட்டியில் வருண் சக்கரவர்த்தி 4 ஓவர்கள் வீசி வெறும் 11 ரன்கள் மட்டுமே கொடுத்து 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். தென்னாப்பிரிக்கா 117 ரன்களுக்குச் சுருண்டது. எளிய இலக்கை விரட்டிய இந்தியா 15.5 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 120 ரன்கள் எடுத்து, 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.