அகமதாபாத்: தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான ஐந்தாவது டி20 போட்டியில் எவ்வளவு ரன் போனாலும் பரவாயில்லை, எனக்கு விக்கெட் தான் முக்கியம் என்று அதிரடியாக பந்துவீசி மிரள வைத்தார் வருண் சக்கரவர்த்தி. தனது 4 ஓவர்களில் ரன்களை வாரி இறைத்தாலும், எதிரணியின் முதுகெலும்பை உடைக்கும் வகையில் மிக முக்கியமான 4 விக்கெட்டுகளை வீழ்த்தி, இந்திய அணியின் வெற்றியை உறுதி செய்தார் தமிழக சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்கரவர்த்தி.
இந்தப் போட்டியில் இந்திய அணி நிர்ணயித்த 232 ரன்கள் என்ற இமாலய இலக்கை துரத்திய தென்னாப்பிரிக்க அணிக்கு குவின்டன் டி காக் அதிரடி துவக்கம் கொடுத்தார். சிக்ஸர் மழை பொழிந்த இந்த ஆட்டத்தில் வருண் சக்கரவர்த்தியும் தப்பவில்லை. அவரது பந்துவீச்சை தென்னாப்பிரிக்க வீரர்கள் குறிவைத்து தாக்கினர்.

இதனால் தனது 4 ஓவர்களில் வருண் சக்கரவர்த்தி மொத்தம் 53 ரன்களை விட்டுக்கொடுத்தார். எகானமி ரேட் 13.20 என்று உச்சத்தை தொட்டது. ஆனால், இங்குதான் ட்விஸ்ட். ரன்கள் போனாலும் வருண் சோர்ந்து போய் தற்காப்பு முறையில் பந்துவீசவில்லை. மாறாக, இன்னும் ஆக்ரோஷமாக பந்துவீசி விக்கெட்டுகளை வேட்டையாடினார்.
வருண் சக்கரவர்த்தி வீழ்த்திய 4 விக்கெட்டுகளும் சாதாரணமானவை அல்ல. முதலில் நிலைத்து நின்று ஆடிய ரீசா ஹென்ட்ரிக்ஸை (13) காலி செய்தார். ஆட்டத்தின் திருப்புமுனையாக 13வது ஓவரில் தென்னாப்பிரிக்க கேப்டன் எய்டன் மார்க்ரம் (6) மற்றும் டோனோவன் ஃபெரீரா (0) ஆகியோரை அடுத்தடுத்து வீழ்த்தி சேஸிங் வேகத்திற்கு முட்டுக்கட்டை போட்டார். கடைசியாக மிரட்டிக் கொண்டிருந்த ஜார்ஜ் லிண்டேவையும் (16) போல்டாக்கினார். மொத்தத்தில் 4 ஓவர்களில் 53 ரன்கள் விட்டுக் கொடுத்து 4 விக்கெட்டுகள் சாய்த்தார்.
முன்பெல்லாம் ரன்களை கட்டுப்படுத்த வேண்டும் என்று நினைக்கும் வருண், இம்முறை முழு வீச்சில் அட்டாக்கிங் பாணியில் வீசினார். பந்தை தூக்கிப் போட்டு, பேட்ஸ்மேன்களை அடிக்கத் தூண்டினார். இதனால் சிக்ஸர்கள் பறந்தாலும், விக்கெட்டுகளும் கொத்து கொத்தாக விழுந்தன.
ஒரு முனையில் பும்ரா ரன்களை கட்டுப்படுத்த, மறுமுனையில் வருண் சக்கரவர்த்தி ரன்களைக் கொடுத்தாலும் விக்கெட்டுகளை வீழ்த்தி அணியை காப்பாற்றினார். 232 ரன்களை தற்காத்து ஆடும் போது விக்கெட்டுகள் தான் முக்கியம் என்பதை உணர்ந்து செயல்பட்ட வருண் சக்கரவர்த்தியின் இந்த துணிச்சலான ஆட்டத்தை விமர்சகர்கள் பாராட்டி வருகின்றனர்.
இந்தப் போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 201 ரன்கள் எடுத்து 30 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இந்திய அணியின் வெற்றிக்கு வருண் சக்கரவர்த்தி முக்கிய காரணமாக இருந்தார்.