எனது முதல் சர்வதேச கிரிக்கெட் சதம் இந்திய அணிக்கு வெற்றியில் முக்கிய பங்காக இருந்ததில் பெருமை கொள்வதாக இந்திய அணியின் நட்சத்திர வீரர் சஞ்சு சாம்சன் தெரிவித்துள்ளார்.
தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய அணி 78 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பதிவு செய்துள்ளது. இந்த வெற்றியின் மூலமாக ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றி அசத்தியுள்ளது. இதற்கு முக்கிய காரணமாக இந்திய அணியின் நட்சத்திர வீரரான சஞ்சு சாம்சன் அமைந்துள்ளார். கேப்டன் உட்பட டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்த வெளியேறிய போது, இளம் வீரரான திலக் வர்மாவுடன் இணைந்து சஞ்சு சாம்சன் அமைத்த பார்ட்னர்ஷிப் இந்திய அணி 296 ரன்களை குவிக்க உதவியாக இருந்தது.

அதேபோல் இந்திய அணிக்காக சதம் விளாசிய முதல் கேரளா வீரர் என்ற சாதனையை சஞ்சு சாம்சன் படைத்துள்ளார். 114 பந்துகளில் 3 சிக்ஸ், 6 பவுண்டரி உட்பட 108 ரன்களை விளாசினார் சஞ்சு சாம்சன். அதுமட்டுமல்லாமல் சவுரவ் கங்குலி, விராட் கோலி ஆகியோருக்கு பின் தென்னாப்பிரிக்கா மண்ணில் சதம் விளாசிய வீரர் என்ற சாதனையை சஞ்சு சாம்சன் படைத்துள்ளார். இதன் காரணமாக சஞ்சு சாம்சனுக்கு ஆட்ட நாயகன் விருது அளிக்கப்பட்டது.
இந்த விருதை பெற்று கொண்ட பின் சஞ்சு சாம்சன் பேசுகையில், இந்த வெற்றியை நினைத்து பெருமை கொள்கிறேன். எனது சதம் இந்திய அணியின் வெற்றிக்கு உதவியை நினைக்கும் போது கூடுதல் மகிழ்ச்சியளிக்கிறது. கடினமாக உழைத்ததற்கான பலன் கிடைத்துள்ளது. ஒருநாள் கிரிக்கெட்டில் எப்போதும் ஆடுகளத்தையும், பவுலர்களின் மனநிலையையும் புரிந்து கொள்வதற்கு சிறிது நேரம் கிடைக்கும். அதேபோல் டாப் ஆர்டரில் பேட்டிங் செய்யும் போது கூடுதலாக 10 முதல் 20 பந்துகளை எடுத்து கொள்ள முடியும். திலக் வர்மாவின் ஆட்டத்தை பார்த்து இந்திய ரசிகர்கள் நிச்சயம் பெருமை கொள்வார்கள்.
கடினமான நேரத்தில் மிகச்சிறந்த ஆட்டத்தை ஆடியிருக்கிறார். அவரிடம் இருந்து இன்னும் எதிர்பார்க்கிறோம். இந்திய அணியின் தரம் என்னவென்பதை இதற்கு முன் ஆடியவர்கள் ஒரு பெஞ்ச்மார்க்காக வைத்து சென்றுள்ளார்கள். அவர்களின் இடத்தில் ஜூனியர் வீரர்கள் பணிகளை செய்ய தொடங்கியுள்ளார்கள். அதேபோல் பவுலர்களுக்கு இது எளிய தொடர் அல்ல. ஏனென்றால் 2 முதல் 3 நாட்களுக்கு ஒரு சர்வதேச போட்டியில் விளையாடி சாதாரணம் கிடையாது. ஆனாலும் மிகச்சிறப்பாக செயல்பட்டுள்ளதாக தெரிவித்தார்.