ராய்ப்பூர்: "இதுதான்யா அந்த பழைய விண்டேஜ் கோலி.. 2016-ல பார்த்த அதே ஆக்ரோஷம்!" என்று இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கொண்டாடித் தீர்த்து வருகின்றனர். ராய்ப்பூரில் நடந்த இரண்டாவது ஒருநாள் போட்டியில், விக்கெட் விழுந்ததும் விராட் கோலி ஆடிய 'நாகினி டான்ஸ்' வீடியோ இணையத்தில் காட்டுத்தீயாக பரவி வருகிறது.
தொடர்ந்து இரண்டு போட்டிகளில் இரண்டு சதங்கள் விளாசி விராட் கோலி பேட்டிங்கில் மிரட்டினாலும், ரசிகர்களை அதைவிட அதிகம் கவர்ந்தது அவரது களச் செயல்பாடுதான். நீண்ட நாட்களுக்கு பின் கோலி ஆடிய நாகினி ஆட்டம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.

ராய்ப்பூர் போட்டியில் தென்னாப்பிரிக்கா பேட்டிங் செய்தபோது, 5-வது ஓவரை அர்ஷ்தீப் சிங் வீசினார். அந்த ஓவரில் ஆபத்தான வீரரான குயின்டன் டி காக் ஆட்டமிழந்தார். விக்கெட் விழுந்த மகிழ்ச்சியில் இந்திய வீரர்கள் கொண்டாட, விராட் கோலி ஒரு படி மேலே சென்றார்.
மைதானத்தில் உற்சாக மிகுதியில் கைகளை வளைத்து, தலையை ஆட்டி ஒரு குட்டி 'நாகினி டான்ஸ்' ஆடினார். வங்கதேச வீரர்கள் அடிக்கடி செய்யும் இந்த கொண்டாட்டத்தை, கோலி கிண்டலாகச் செய்து காட்டியது ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது.
பொதுவாக சமீபகாலமாக கோலி களத்தில் சற்று அமைதியாகவே காணப்பட்டார். ஆனால் இந்தத் தொடரில் அவர் பழைய பன்னீர்செல்வமாக.. சாரி.. பழைய விராட் கோலியாக மாறியுள்ளார்.
இந்த வீடியோவை பகிரும் ரசிகர்கள், "இது 2016-ம் ஆண்டு பார்த்த விராட் கோலி. அதே ஆக்ரோஷம், அதே குறும்புத்தனம் மீண்டும் வந்துவிட்டது. இனி எதிரணிகள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். இந்த எனர்ஜி தான் இந்திய அணிக்குத் தேவை" என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.
களத்தில் டான்ஸ் ஆடியது மட்டுமல்லாமல், பேட்டிங்கிலும் அதிரடி ஆட்டம் ஆடினார் கோலி. 93 பந்துகளில் 102 ரன்கள் குவித்து, சர்வதேச கிரிக்கெட்டில் தனது 84-வது சதத்தைப் பதிவு செய்தார். ருதுராஜ் கெய்க்வாட்டுடன் (105) இணைந்து 195 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து இந்திய அணிக்கு 358 ரன்கள் என்ற வலுவான ஸ்கோரை அமைத்துக் கொடுத்தார்.
எனினும், தென்னாப்பிரிக்கா அபாரமான பேட்டிங்கால் இந்தப் போட்டியில் வெற்றி பெற்றது. எய்டன் மார்கிரம் சதம் அடித்தார், பிரெவிஸ் அதிரடியாக அரைசதம் அடித்தார். அதே சமயம், இந்திய பந்துவீச்சாளர்கள் ரன்களை கட்டுப்படுத்த முடியாமல் திணறினர். தென்னாப்பிரிக்கா 49.2 ஓவரில் வெற்றி இலக்கை எட்டி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.