ராஞ்சி: இந்தியா, தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டியில், விராட் கோலி தனது 52வது ஒருநாள் சதத்தை பூர்த்தி செய்த பிறகு டி20 பாணியில் அதிரடி காட்டினார். ராஞ்சியில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் கோலி இரட்டை சதம் அடிப்பார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.
கோலி, பிரெனலன் சுப்ராயன் வீசிய 40வது ஓவரில் பந்துகளை அடித்து நொறுக்கினார். கே.எல். ராகுல் முதல் பந்தில் ஒரு ரன் எடுத்த பிறகு, கோலி ஒரு டாட் பந்தை சந்தித்தார். பின்னர், சுப்ராயனின் பந்துகளை மைதானத்தின் பல திசைகளிலும் சிதறடித்தார்.

37 வயதான கோலி, தனது அதிரடியை ஒரு பவுண்டரியுடன் தொடங்கினார். தொடர்ந்து, இரண்டு சிக்ஸர்களை விளாசி ரசிகர்களை பரவசப்படுத்தினார். அந்த ஓவரை எக்ஸ்ட்ரா கவர் திசையில் ஒரு பவுண்டரியுடன் கோலி நிறைவு செய்தார்.தனது 83வது சர்வதேச சதத்தை அடித்த அடுத்த ஓவரிலேயே விராட் கோலியின் இந்த அதிரடி ஆட்டம் ரசிகர்களை குதுகலப்படுத்தியது.
ராஞ்சியில் இது அவருக்கு மூன்றாவது ஒருநாள் சதம். மேலும், தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிராக ஒருநாள் போட்டிகளில் கோலி அடித்த ஆறாவது சதம் இதுவாகும்.
கடைசியாக கோலி விளையாடிய போது, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் 74 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்த நிலையில், தனது சிறப்பான ஃபார்மை கோலி இந்த போட்டியிலும் தொடர்ந்தார்.
விராட் கோலியின் இந்த சதம், முதல் ஒருநாள் போட்டியில் இந்தியாவை வலுவான நிலைக்கு கொண்டு சென்றது.இந்தியா 42 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 272 ரன்கள் எடுத்திருந்தது.அப்போது கோலி 116 பந்துகளில் 134 ரன்களுடனும், ராகுல் 36 பந்துகளில் 25 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
கைவசம் இன்னும் 8 ஓவர் இருந்த நிலையில், அதில் கோலி மட்டும் பெரும்பான்மையான பந்துகளை எதிர்கொண்டிருந்தால் நிச்சயம் இரட்டை சதமோ இல்லை குறைந்தபட்சம், அவருடைய தனிப்பட்ட அதிகபட்ச ஸ்கோரான 183 ரன்களையும் கோலி முறியடித்திருக்கலாம். ஆனால், கோலி 42.5வது ஓவரில் 135 ரன்களில் பெவிலியன் திரும்பினார்.