விசாகப்பட்டினம்: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரை இந்தியா கைப்பற்றிய உற்சாகத்தில் இருக்கும்போது, வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங்கை விராட் கோலி கலாய்த்த வீடியோ ஒன்று இணையத்தில் தீயாய் பரவி வருகிறது. "நல்லவேளை டாஸ் ஜெயிச்சோம்.. இல்லனா உனக்கும் செஞ்சுரி கன்ஃபார்ம்" என்று கோலி அடித்த கமெண்ட் ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்துள்ளது.
இந்திய அணி விசாகப்பட்டினத்தில் நடந்த 3-வது ஒருநாள் போட்டியில் 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று, தொடரை 2-1 என கைப்பற்றியது. நேற்று நடந்த மூன்றவது ஒருநாள் போட்டியில் தென்னாப்பிரிக்கா 270 ரன்கள் குவித்தது.

அடுத்து இந்தியா பேட்டிங் செய்த போது ஜெய்ஸ்வால் சதம் அடித்தார். ரோஹித் மற்றும் கோலி அரைசதம் அடித்து இருந்தனர். கோலி கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இலக்கு பெரிதாக இருந்திருந்தால் விராட் கோலி சதமடித்து இருக்க வாய்ப்பு இருந்தது.
ஏற்கனவே, இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகளிலும் விராட் கோலி சதம் அடித்து இருந்தார். எனவே, மூன்றாவது போட்டியிலும் சதம் அடித்து இருந்தால் ஹாட்ரிக் சதம் அடித்து இருக்கும் வாய்ப்பு இருந்தது. இந்த நிலையில், போட்டி முடிந்த பிறகு, அர்ஷ்தீப் சிங் தனது இன்ஸ்டாகிராமில் ஒரு வீடியோ வெளியிட்டார்.
வழக்கமாக போட்டி முடிந்ததும் சக வீரர்களுடன் ஜாலியாக ரீல்ஸ் செய்வதை அர்ஷ்தீப் வழக்கமாக வைத்துள்ளார். இம்முறை அவரது ரீலில் விராட் கோலி சிக்கினார். அந்த வீடியோவில் அர்ஷ்தீப் சிங் கோலியிடம், "பாஜி (சகோதரரே), டார்கெட் ரன் கம்மியா போச்சு.. இல்லனா இன்னைக்கு உங்களுக்கு ஹாட்ரிக் செஞ்சுரி கன்ஃபார்ம்" என்று கூறினார். அதாவது தென்னாப்பிரிக்கா 270 ரன்கள் மட்டுமே அடித்ததால், கோலியால் சதம் அடிக்க முடியவில்லை என்று கூறினார்.
இதைக் கேட்ட விராட் கோலி சற்றும் தாமதிக்காமல், "நல்லவேளை நாம டாஸ் ஜெயிச்சோம்.. இல்லனா இரவு நேர பனியில் பவுலிங் போடும்போது, உனக்கும் இன்னைக்கு செஞ்சுரி கன்ஃபார்ம்" என்று சொல்லிச் சிரித்தார். பனியில் பந்துவீசுவது எவ்வளவு கடினம், அதனால் பந்துவீச்சில் அர்ஷ்தீப் 100 ரன்களை வாரி இறைத்து இருப்பார் என்பதை மறைமுகமாகச் சுட்டிக்காட்டி கிண்டல் செய்தார் விராட் கோலி.
இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. களத்தில் எவ்வளவு சீரியஸாக இருந்தாலும், ஓய்வு நேரத்தில் மூத்த வீரர்கள் மற்றும் இளம் வீரர்கள் அனைவரும் இப்படி ஜாலியாக இருப்பதை, ரசிகர்கள் புகழ்ந்து வருகின்றனர்.