கவுஹாத்தி: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணி படுதோல்வியை நோக்கிச் சென்று கொண்டிருக்கும் நிலையில், இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலியின் சகோதரர் விகாஸ் கோலி, சமூக வலைதளத்தில் ஒரு பதிவைப் போட்டுள்ளார். இது இந்திய அணியின் தற்போதைய தலைமைப் பயிற்சியாளர் கவுதம் கம்பீரை மறைமுகமாகத் தாக்கும் வகையில் இருப்பதாகக் கூறி, கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய அணி சொந்த மண்ணில் தென்னாப்பிரிக்காவிடம் 0-2 என்ற கணக்கில் ஒயிட்வாஷ் தோல்வி அடையும் அபாயத்தில் உள்ளது. முதல் போட்டியில் தோல்வியடைந்த இந்தியா, இரண்டாவது போட்டியிலும் படுமோசமான நிலையில் உள்ளது. இந்தச் சூழலில், விராட் கோலியின் சகோதரரான விகாஸ் கோலி, தனது சமூக வலைதளப் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டார். அதில்,
"ஒரு காலத்தில் நாம் வெளிநாடுகளில்கூட வெற்றி பெறுவதற்காக விளையாடினோம்... ஆனால் இப்போது, இந்தியாவிலேயே போட்டியை 'டிரா' செய்வதற்காக விளையாடுகிறோம். தேவையில்லாமல், நன்றாக இருந்த விஷயங்களை மாற்றி, அதிகாரம் செய்ய நினைத்தால் இப்படித்தான் ஆகும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

அவர் நேரடியாக யாரையும் குறிப்பிடவில்லை என்றாலும், "அதிகாரம் செய்வது", "தேவையில்லாமல் விஷயங்களை மாற்றுவது" போன்ற வார்த்தைகள், தலைமைப் பயிற்சியாளர் கவுதம் கம்பீரையே குறிப்பதாக ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
கவுதம் கம்பீர் பயிற்சியாளராகப் பொறுப்பேற்றதிலிருந்து இந்திய டெஸ்ட் அணியில் பல மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. அணியின் தேர்வு, வீரர்களைக் கையாண்ட விதம் மற்றும் பேட்டிங் ஆர்டரில் செய்யப்படும் தொடர் மாற்றங்கள் ஆகியவை கடும் விமர்சனத்துக்கு உள்ளாகி வருகின்றன. விகாஸ் கோலியின் பதிவு, இந்த விமர்சனங்களுக்கு மேலும் வலு சேர்ப்பதாக அமைந்துள்ளது.
கவுகாத்தியில் நடைபெற்று வரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில், முதல் இன்னிங்ஸில் 288 ரன்கள் பின்தங்கிய இந்தியா, தற்போது 549 ரன்கள் என்ற இமாலய இலக்கை துரத்தி வருகிறது. நான்காம் நாள் ஆட்ட முடிவிலேயே 2 விக்கெட்டுகளை இழந்துவிட்டதால், போட்டியை டிரா செய்வதே கிட்டத்தட்ட சாத்தியமில்லாத ஒன்றாக மாறியுள்ளது.
கவுதம் கம்பீரின் பயிற்சியின் கீழ் இந்திய அணியின் டெஸ்ட் ரெக்கார்ட் மிகவும் மோசமாக உள்ளது. இந்த டெஸ்டில் இந்தியா தோற்றால், இந்திய கிரிக்கெட் வரலாற்றிலேயே சொந்த மண்ணில் இரண்டு முறை ஒயிட்வாஷ் ஆன தொடர்களுக்குப் பயிற்சியாளராக இருந்தவர் என்ற மோசமான சாதனையை கம்பீர் படைப்பார்.
அவர் பயிற்சியாளராக இருந்த 18 டெஸ்ட் போட்டிகளில், இந்திய அணி 9-ல் தோல்வியும், வெறும் 7-ல் வெற்றியும் பெற்றுள்ளது. சொந்த மண்ணில் அவர் பயிற்சியளித்த 4 தொடர்களில், இது இரண்டாவது தொடர் தோல்வியாக அமையும்.
இந்திய அணி ஒரு மிகப்பெரிய மாறுதல் கட்டத்தில் இருப்பது உண்மைதான் என்றாலும், கம்பீரின் தவறான அணித் தேர்வுகள் மற்றும் தொடர் மாற்றங்கள் அணியின் சரிவுக்கு முக்கியக் காரணம் என்று விமர்சகர்கள் கருதுகின்றனர். இந்தச் சூழலில், விகாஸ் கோலியின் இந்தப் பதிவு, எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றுவதுபோல அமைந்துள்ளது.