ராஞ்சி: இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையிலான ஒருநாள் போட்டியில் விராட் கோலி சதம் அடித்து மிரட்டிய நிலையில், அவரது சகோதரர் விகாஸ் கோலி விமர்சகர்களுக்கு சமூக வலைதளத்தில் காரமான பதிலடி கொடுத்துள்ளார். "இது புயலுக்கு முன் அமைதி" என்று அவர் பதிவிட்டுள்ளது வைரலாகி வருகிறது. ரசிகர்கள் பலரும் கோலியை இந்திய அணியில் இருந்து ஓரங்கட்ட முயன்று வரும் கம்பீருக்கு தான் இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார் என கூறி வருகின்றனர்.
தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக ராஞ்சியில் நடந்த முதல் ஒருநாள் போட்டியில், விராட் கோலி தனது 52-வது ஒருநாள் சதத்தைப் பதிவு செய்தார். 120 பந்துகளில் 11 பவுண்டரிகள் மற்றும் 7 சிக்ஸர்களுடன் 135 ரன்கள் குவித்து, இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாகத் திகழ்ந்தார்.

விராட் கோலி டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றதாலும், சமீபத்திய ஃபார்ம் காரணமாகவும் அவர் மீது விமர்சனங்கள் எழுந்து வந்தன. இந்நிலையில், ராஞ்சி சதத்தின் மூலம் கோலி தனது பேட் மூலம் பதில் சொல்ல, அவரது குடும்பத்தினர் சமூக வலைதளங்கள் மூலம் பதிலடி கொடுத்து வருகின்றனர்.
விராட் கோலியின் சகோதரர் விகாஸ் கோலி தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் கோலியின் சதத்தைக் கொண்டாடியதோடு, விமர்சகர்களை நோக்கி "ஷ்ஷ்ஷ்..." என்று சைகை காட்டி அமைதியாக இருக்குமாறு பதிவிட்டுள்ளார்.
மேலும், "இது புயலுக்கு முன் அமைதி மட்டுமே" என்று குறிப்பிட்டுள்ளார். அதாவது, கோலியின் ஆட்டம் இப்போதைக்கு அடங்காது, இனிமேல் தான் அவரது தாண்டவத்தைப் பார்க்கப் போகிறீர்கள் என்று விமர்சகர்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் தொனியில் அந்தப் பதிவு அமைந்துள்ளது.
ஏற்கனவே விராட் கோலியின் சகோதரி பாவனா, ரோஹித் மற்றும் கோலி இணைந்திருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்து விமர்சகர்களுக்குப் பதிலடி கொடுத்திருந்தார். தற்போது அண்ணன், தங்கை என இருவரும் கோலியின் பக்கம் அரணாக நின்று, விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளனர்.
இதற்கிடையில் ஆட்டநாயகன் விருது பெற்ற விராட் கோலி பேசுகையில், "நான் அதிகப்படியான தயாரிப்புகளில் நம்பிக்கை கொள்வதில்லை. என்னுடைய கிரிக்கெட் முழுவதும் மனரீதியானது. நான் மனதளவில் தயாராக இருந்தாலே போதும். உடற்தகுதி என்பது எனக்கு கிரிக்கெட்டுக்காக மட்டுமல்ல, அது என் வாழ்க்கை முறை. நான் ஆட்டத்தை மனக்கண்ணில் காட்சிப்படுத்தி பார்ப்பேன். அது சரியாக இருந்தால் களத்தில் நான் தயாராக இருப்பேன்" என்று கூறினார்.