ராஞ்சி: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் அதிரடி சதமடித்து ஆட்டநாயகன் விருது பெற்ற விராட் கோலி, போட்டிக்குப் பிறகு தனது கிரிக்கெட் எதிர்காலம் குறித்தும், தனது உடற்தகுதி குறித்தும் மிகவும் பக்குவமாகப் பேசியுள்ளார். "நான் இனி கிரிக்கெட்டின் ஒரு வடிவத்தில் மட்டுமே விளையாடுவேன்" என்று அவர் கூறியது ரசிகர்களிடையே முக்கிய விவாதமாக மாறியுள்ளது.
இந்தப் போட்டிக்கு முன் விராட் கோலி டெஸ்ட் போட்டி ஓய்வை பின்வாங்கி மீண்டும் டெஸ்ட் போட்டிகளில் ஆடப் போகிறார் என செய்தி வெளியாகி இருந்த நிலையில் கோலி அதற்கு பதில் அளித்தார். ராஞ்சியில் நடந்த போட்டியில் 135 ரன்கள் குவித்து அணியின் வெற்றிக்கு வித்திட்ட கோலி, ஆட்டநாயகன் விருதைப் பெற்றுக் கொண்டு வர்ணனையாளர்களிடம் மனம் திறந்தார்.

தனது இன்னிங்ஸ் குறித்துப் பேசிய கோலி, "இன்று ஆட்டத்திற்குள் நல்ல மனநிலையுடன் நுழைந்தது மகிழ்ச்சியாக இருந்தது. முதல் 20-25 ஓவர்கள் வரை பிட்ச் பேட்டிங்கிற்கு நன்றாக இருந்தது, பிறகு வேகம் குறைந்தது. நான் வேறு எதையும் பற்றி அதிகம் யோசிக்கவில்லை. 'நானும் என்னை நோக்கி வரும் பந்தும் மட்டுமே' என்று நினைத்தேன். நான் ஏன் கிரிக்கெட் விளையாட ஆரம்பித்தேனோ, அந்த மகிழ்ச்சியை இன்று உணர்ந்தேன். ஒருமுறை செட் ஆகிவிட்டால், இத்தனை வருட அனுபவம் தானாகவே கைகொடுக்கும்" என்றார்.
தனது தயாரிப்பு முறை குறித்துப் பேசிய விராட் கோலி, "உண்மையைச் சொன்னால், நான் அதிகப்படியான தயாரிப்புகளில் நம்பிக்கை கொண்டவன் அல்ல. என்னுடைய கிரிக்கெட் முழுவதும் மனரீதியானது. நான் தினமும் கடுமையாக உடற்பயிற்சி செய்கிறேன். அது இப்போது கிரிக்கெட்டுக்காக மட்டுமல்ல, அதுவே என் வாழ்க்கை முறையாகிவிட்டது.
எனது பிட்னஸ் சரியாக இருந்து, மனதளவில் நான் மகிழ்ச்சியாக இருந்தால் போதும். ஆட்டத்தை என் மனக்கண்ணில் ஓடவிட்டுப் பார்ப்பேன். அதில் நான் வேகமாக ஓடுவதையும், பந்துக்கு ரியாக்ட் செய்வதையும் பார்த்தால், நான் போட்டிக்குத் தயார் என்று அர்த்தம்" என்று தனது பிட்னஸ் ரகசியத்தைப் பகிர்ந்தார்.
ராஞ்சிக்கு முன்கூட்டியே வந்தது குறித்துப் பேசிய அவர், "ஆம், இங்குள்ள கண்டிஷனைப் புரிந்து கொள்ளவே முன்னதாக வந்தேன். பகலிலும், இரவிலும் பயிற்சி செய்தேன். போட்டிக்கு முந்தைய நாள் முழு ஓய்வு எடுத்தேன். எனக்கு இப்போது 37 வயதாகிறது. அதனால் சோர்வில் இருந்து மீள்வது மிகவும் முக்கியம்" என்று சிரித்துக்கொண்டே கூறினார்.
தனது எதிர்காலம் மற்றும் ஓய்வு குறித்து மறைமுகமாகப் பேசிய அவர், "நான் எங்கு வந்தாலும், களத்தில் இறங்கினால் 120% உழைப்பைக் கொடுப்பேன். நீங்கள் கேட்டது போல, இனி எப்போதும் இப்படித்தான் இருக்கப் போகிறது. நான் கிரிக்கெட்டின் ஒரே ஒரு வடிவத்தில் (ஒருநாள் போட்டி) மட்டுமே விளையாடப் போகிறேன்" என்று உறுதிப்படுத்தினார். ஏற்கனவே டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டதை இதன் மூலம் அவர் மீண்டும் நினைவுபடுத்தினார்.
"கடந்த 15-16 வருடங்களில் 300-க்கும் மேற்பட்ட ஒருநாள் போட்டிகளில் ஆடிவிட்டேன். வலைப்பயிற்சியில் இடைவேளை இல்லாமல் என்னால் 2 மணி நேரம் பேட்டிங் செய்ய முடிந்தால், என் உடல் தகுதி சரியாக இருக்கிறது என்று அர்த்தம். அனுபவம் இருக்கும்போது, ஃபார்ம் பற்றி அதிகம் கவலைப்படத் தேவையில்லை" என்று நம்பிக்கையுடன் முடித்தார் விராட் கோலி.