விசாகப்பட்டினம்: கிரிக்கெட் மைதானத்தில் விராட் கோலி இருந்தாலே அங்கு உற்சாகத்திற்குப் பஞ்சம் இருக்காது. விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டியில், விராட் கோலி தனது பேட்டிங் மட்டுமல்லாமல், பீல்டிங்கின் போது செய்த சேட்டைகள் மூலம் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளார். விக்கெட் விழுந்ததும் அவர் வெளிப்படுத்திய ரியாக்ஷன்கள் இணையத்தில் பரவி வருகின்றன.
தென்னாப்பிரிக்க இன்னிங்ஸின் போது, கேப்டன் டெம்பா பவுமா மற்றும் குயின்டன் டி காக் ஜோடி 113 ரன்கள் சேர்த்து இந்திய அணியை அச்சுறுத்தியது. 21-வது ஓவரில் ரவீந்திர ஜடேஜா பந்துவீச்சில் பவுமா 48 ரன்கள் எடுத்த நிலையில் கொடுத்த கேட்சை, பேக்வேர்ட் பாயிண்டில் நின்றிருந்த விராட் கோலி கச்சிதமாகப் பிடித்தார்.

முக்கியமான விக்கெட் விழுந்த மகிழ்ச்சியில், கோலி மைதானத்தில் ஒரு விசித்திரமான நடையை நடந்து காட்டினார். இது 'புஷ்பா' பட ஸ்டைல் போலவும், அதே சமயம் குட்டையாக இருக்கும் டெம்பா பவுமா நடப்பதை கிண்டல் செய்வது போலவும் இருந்தது. கோலியின் இந்தச் செய்கையைப் பார்த்த ரசிகர்கள் மற்றும் வர்ணனையாளர்கள் சிரிப்பை அடக்க முடியாமல் திணறினர்.
அடுத்ததாக, போட்டியின் கடைசி கட்டத்தில் குல்தீப் யாதவ் அபாயகரமான வீரரான கார்பின் போஷ் விக்கெட்டை 'காட் அண்ட் போல்ட்' முறையில் தானே கேட்ச் பிடித்து வீழ்த்தினார். விக்கெட் விழுந்த அடுத்த நொடியே ஓடி வந்த விராட் கோலி, குல்தீப் யாதவின் இரண்டு கைகளையும் பிடித்துக்கொண்டு, ஒரு ரொமான்டிக் பாடலுக்கு ஆடுவது போல "ஜோடி டான்ஸ்" ஆடினார். குல்தீப்பும் கோலியுடன் இணைந்து அந்த ஸ்டெப்பை போட, மைதானமே கரகோஷத்தில் அதிர்ந்தது.
கோலி மட்டுமல்ல, டாஸ் போடும்போது கேப்டன் கே.எல்.ராகுல் நடந்து வந்த விதமும் இணையத்தில் பேசப்பட்டது. இப்படி ஆட்டம் முழுவதும் இந்திய வீரர்கள் மிகவும் ஜாலியாகவும், அதே சமயம் ஆக்ரோஷமாகவும் செயல்பட்டனர். இறுதியில் தென்னாப்பிரிக்கா 270 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. விராட் கோலியின் இந்த வீடியோக்களை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பரப்பி வருகின்றனர்.