நவி மும்பை: 2026 டி20 உலகக்கோப்பை பயிற்சி ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா அணியை 30 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி பெற்றது. பேட்டிங்கில் இஷான் கிஷனின் அதிரடியும், பந்துவீச்சில் கேப்டன் சூர்யகுமார் யாதவ் செய்த சோதனையும் இந்த வெற்றியின் முக்கிய அம்சங்களாக அமைந்தன. இந்திய அணியில் விக்கெட் கீப்பரும், கேப்டனும் மட்டும் தான் பந்து வீசவில்லை.
நவி மும்பையில் உள்ள டி.ஒய்.பாட்டீல் மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தது. உலகக்கோப்பை அணியில் தொடக்க வீரராகக் களமிறங்கப்போவது யார் என்ற விவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் இந்த ஆட்டம் அமைந்தது. சஞ்சு சாம்சனுக்குப் பதிலாகத் தொடக்க வீரராகக் களமிறங்கிய இஷான் கிஷன், முதல் பந்திலிருந்தே தென்னாப்பிரிக்கா பந்துவீச்சாளர்களைப் பதம் பார்த்தார்.

குறிப்பாகத் தென்னாப்பிரிக்காவின் வேகப்பந்து வீச்சாளர் அன்ரிச் நோர்ட்ஜே வீசிய 5வது ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸர்கள் உட்பட 29 ரன்கள் குவிக்கப்பட, மைதானமே அதிர்ந்தது. வெறும் 20 பந்துகளில் 7 இமாலய சிக்ஸர்கள், 2 பவுண்டரிகளுடன் 53 ரன்கள் குவித்த இஷான் கிஷன், மற்ற வீரர்களுக்கு வாய்ப்பு அளிப்பதற்காகத் தாமாகவே மைதானத்தை விட்டு வெளியேறினார். இஷான் கிஷனின் இந்த அதிரடி ஆட்டத்தால், இனி வரும் போட்டிகளில் சஞ்சு சாம்சனுக்கு ஆடும் லெவனில் இடம் கிடைப்பது சந்தேகமாகியுள்ளது.
இஷான் கிஷனைத் தொடர்ந்து களமிறங்கிய திலக் வர்மா 19 பந்துகளில் 45 ரன்கள் விளாசினார். மிடில் ஆர்டரில் வந்த ஹர்திக் பாண்டியா 10 பந்துகளில் 30 ரன்கள் குவித்து ஆட்டத்தை முடித்து வைத்தார். அக்சர் படேல் நிதானமாக ஆடி 35 ரன்கள் சேர்த்தார். 20 ஓவர் முடிவில் இந்திய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 240 ரன்கள் என்ற இமாலய இலக்கை நிர்ணயித்தது.
241 ரன்கள் என்ற இலக்கைத் துரத்திய தென்னாப்பிரிக்கா அணிக்குத் தொடக்கம் சரியாக அமையவில்லை. இருப்பினும் விக்கெட் கீப்பர் ரியான் ரிக்கல்டன் (44), கேப்டன் மார்க்ரம் (38) மற்றும் ஜேசன் ஸ்மித் (35) ஆகியோர் போராடினர். கடைசி நேரத்தில் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 21 பந்துகளில் 45 ரன்கள் விளாசினார். இருப்பினும் அந்த அணியால் 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 210 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.
இந்தப் போட்டியில் இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ் மொத்தம் 9 பந்துவீச்சாளர்களைப் பயன்படுத்தினார். கேப்டனையும், விக்கெட் கீப்பரையும் தவிர களத்தில் இருந்த ஒன்பது வீரர்களும் பந்துவீசினர். அபிஷேக் சர்மா 3 ஓவர்கள் வீசி 32 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். வருண் சக்கரவர்த்தி 2 ஓவர்களில் வெறும் 12 ரன்கள் கொடுத்து 1 விக்கெட் வீழ்த்தினார்.
அக்சர் படேல் ஒரு ஓவர் வீசி 2 ரன்கள் மட்டுமே கொடுத்து 1 விக்கெட் எடுத்தார். அர்ஷ்தீப் சிங் 4 ஓவர்கள் வீசி 29 ரன்கள் கொடுத்து 1 விக்கெட் எடுத்தார். அதே சமயம் சிவம் துபே 4 ஓவர்களில் 57 ரன்களையும், ககிசோ ரபாடா 3 ஓவர்களில் 44 ரன்களையும் வாரி வழங்கினர்.
பேட்டிங்கில் 240 ரன்கள் குவித்தது மற்றும் பந்துவீச்சில் முக்கிய பந்துவீச்சாளர்கள் சிறப்பாகச் செயல்பட்டது இந்திய அணிக்கு நம்பிக்கையை அளித்துள்ளது. குறிப்பாக இஷான் கிஷனின் அதிரடி ஃபார்ம் இந்திய அணியின் டாப் ஆர்டர் பேட்டிங்கை மேலும் வலுப்படுத்தியுள்ளது. சஞ்சு சாம்சன், பும்ரா போன்றோர் விளையாடாமலேயே இந்தியா இந்த இமாலய வெற்றியைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.