கொல்கத்தா: இந்திய டெஸ்ட் அணியின் "ஆல்-ரவுண்டர் மோகம்" மீண்டும் ஒருமுறை வெளிச்சத்திற்கு வந்துள்ளது. தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான கொல்கத்தா டெஸ்ட் போட்டிக்கான ஆடும் லெவனில், தமிழக வீரரும், நம்பர் 3 இடத்திற்குப் பொருத்தமானவருமான சாய் சுதர்ஷன் அதிரடியாக நீக்கப்பட்டு, அவருக்குப் பதிலாக ஆல்-ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர் அந்த இடத்தில் களமிறக்கப்பட்டுள்ளார்.
இந்தியாவின் இந்த அணித் தேர்வு, ஜாம்பவான் அனில் கும்ப்ளே உட்பட பல முன்னாள் வீரர்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கொல்கத்தா டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்த நிலையில், இந்திய அணி நான்கு சுழற்பந்து வீச்சாளர்கள் மற்றும் இரண்டு வேகப்பந்து வீச்சாளர்களுடன் களமிறங்கியுள்ளது.

இதில் ஆச்சரியம் என்னவென்றால், ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர் மற்றும் அக்சர் படேல் என மூன்று சுழற்பந்து வீச்சு ஆல்-ரவுண்டர்கள் அணியில் இடம்பெற்றுள்ளனர். வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முந்தைய டெஸ்டில் இருந்து இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
நிதிஷ் குமார் ரெட்டி மற்றும் சாய் சுதர்ஷன் ஆகியோருக்குப் பதிலாக, ரிஷப் பன்ட் மற்றும் அக்சர் படேல் அணிக்குள் வந்துள்ளனர். இதில், இந்தியா 'ஏ' அணிக்காக விளையாட நிதிஷ் ரெட்டி விடுவிக்கப்பட்ட நிலையில், சாய் சுதர்ஷன் எந்தக் காரணமும் இன்றி நீக்கப்பட்டுள்ளது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவின் இந்த அணித் தேர்வு குறித்து, போட்டி தொடங்குவதற்கு முன்பு வர்ணனையில் பேசிய ஜாம்பவான் அனில் கும்ப்ளே, தனது அதிர்ச்சியை வெளிப்படையாகக் காட்டினார். "இந்த அணித் தேர்வைக் கண்டு நான் மிகவும் ஆச்சரியப்படுகிறேன். சாய் சுதர்ஷன் நிச்சயம் இந்தப் போட்டியில் விளையாடுவார் என்று நான் எதிர்பார்த்தேன். இப்போது யார் நம்பர் 3-ல் பேட்டிங் செய்வார்கள்? ஓ... வாஷிங்டன் சுந்தர் அந்த இடத்தில் களமிறக்கப்பட்டுள்ளார். 4 சுழற்பந்து வீச்சாளர்கள் மற்றும் 2 வேகப்பந்து வீச்சாளர்களுடன் இந்தியா களமிறங்குகிறது" என்றார் கும்ப்ளே.
தொடர்ந்து பேசிய அவர், "நான் 3 சுழற்பந்து வீச்சாளர்கள் விளையாடுவார்கள் என எதிர்பார்த்தேன். 4 பேர் என்பது கொஞ்சம் சவாலானது. முதல் நாளில் ஆடுகளம் பேட்டிங்கிற்கு நன்றாக இருக்கும். எனவே, ஒரு பந்துவீச்சாளருக்கு பந்துவீச அதிக வாய்ப்பு கிடைக்காமல் போகலாம். சுப்மன் கில் தனது பந்துவீச்சாளர்களை எப்படிப் பயன்படுத்துகிறார் என்பதைப் பார்ப்பது சுவாரஸ்யமாக இருக்கும்," என்று குறிப்பிட்டார்.
இந்திய அணியின் கட்டமைப்பைப் பார்த்து குழம்பிப் போன கும்ப்ளே, "இது முழுக்க முழுக்க ஆல்-ரவுண்டர்கள் நிறைந்த அணி. பேட்டிங் வரிசையைப் பார்த்தால், வாஷிங்டன் சுந்தர் நம்பர் 3-ல் ஆடுகிறார். உண்மையான பேட்ஸ்மேன்கள் என்றால் கில், ஜெய்ஸ்வால் மற்றும் ராகுல் மட்டுமே. ரிஷப் பன்ட், துருவ் ஜுரெல், ஜடேஜா, அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர் என மற்ற அனைவரும் ஆல்-ரவுண்டர்கள்தான். இந்திய அணி மூன்று வடிவங்களிலும் இந்த அணுகுமுறையைத்தான் பின்பற்றுகிறது என்று நினைக்கிறேன்," என்று கூறினார்.
ஒரு சிறப்பு பேட்ஸ்மேனை நீக்கிவிட்டு, அந்த இடத்தில் ஒரு ஆல்-ரவுண்டரை நம்பர் 3 போன்ற முக்கிய இடத்தில் களமிறக்கியுள்ளது, இந்திய அணி நிர்வாகத்தின் இந்த முடிவு எந்த அளவிற்குப் பலனளிக்கும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
இந்தியா: யஷஸ்வி ஜெய்ஸ்வால், கே.எல். ராகுல், வாஷிங்டன் சுந்தர், சுப்மன் கில் (கேப்டன்), ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, துருவ் ஜுரெல், அக்சர் படேல், குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ்.
தென்னாப்பிரிக்கா: ஐடன் மார்க்ரம், ரியான் ரிக்கெல்டன், வியான் முல்டர், டெம்பா பவுமா (கேப்டன்), டோனி டி சோர்ஸி, டிரிஸ்டன் ஸ்டப்ஸ், கைல் வெர்ரெய்ன் (விக்கெட் கீப்பர்), சைமன் ஹார்மர், மார்கோ ஜான்சன், கார்பின் போஷ், கேசவ் மஹாராஜ்.