மும்பை: இந்திய அணி வீரர் வாஷிங்டன் சுந்தரின் பந்துவீச்சுத் திறமை ரவிச்சந்திரன் அஸ்வினின் திறமையில் பாதி கூட இல்லை என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் முகமது கைஃப் விமர்சித்துள்ளார். தற்போது தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில், சுந்தர் ஒரு பேட்ஸ்மேனா அல்லது பந்துவீச்சாளரா என்ற குழப்பம் இருந்து வரும் நிலையில், அவரை எவ்வாறு சரியாகப் பயன்படுத்த வேண்டும் என்பது குறித்தும் கைஃப் தனது கருத்துக்களைப் பகிர்ந்துள்ளார்.
இது குறித்துப் பேசிய முகமது கைஃப், "வாஷிங்டன் சுந்தரின் பங்கு என்ன என்பது இந்திய அணி நிர்வாகத்தால் மட்டுமே சொல்ல முடியும். அவர் ஓர் சுழற்பந்து வீச்சாளராகப் பார்க்கப்பட்டால், ரவிச்சந்திரன் அஸ்வினின் திறமையில் பாதியளவுக்கு கூட அவர் இல்லை. மேலும், டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் வெவ்வேறு கேப்டன்கள் அவரை அதிகம் பந்துவீச அனுமதிப்பதில்லை."

"போட்டி நெருக்கடியான சூழ்நிலைகளில், கேப்டன்கள் ரவீந்திர ஜடேஜா அல்லது குல்தீப் யாதவையே நம்புகிறார்கள். எந்த சூழ்நிலையிலும் வாஷிங்டன் சுந்தரால் விக்கெட் எடுக்க முடியும் என்று அவர்கள் நம்புவதில்லை. இதனால், அவர் தனது பந்துவீச்சுத் திறனில் கணிசமாக மேம்பட வேண்டியது அவசியம்."
"வாஷிங்டன் சுந்தரின் பந்துவீச்சுத் திறன் தற்போது குறைவாகவே இருக்கிறது. ஒருபுறம் அவரை பேட்டிங் செய்யுமாறு அழுத்தம் கொடுப்பதன் காரணமாக, அவர் ஒரு பேட்ஸ்மேனா அல்லது பந்துவீச்சாளரா என்ற பெரிய சந்தேகம் நிலவுகிறது. அவருக்கு ஒரு தெளிவான பொறுப்பைக் கொடுக்க வேண்டும். அக்சர் பட்டேல் செய்த பங்கை அவரால் செய்ய முடியும்."
"சுந்தரின் முக்கியப் பங்களிப்பு பந்துவீச்சில்தான் உள்ளது. அவரது பேட்டிங் என்பது ஒரு கூடுதல் பலமே. பந்துவீச்சில் அவர் தடுமாறினால், அணியில் அவரது இடம் கேள்விக்குறியாகிவிடும். ஆகையால், அவரை முதலில் ஒரு முழுமையான பந்துவீச்சாளராகக் கருதி, அதன்பிறகு அவரது பேட்டிங் திறனைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்," என்று முகமது கைஃப் வலியுறுத்தினார்.தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் வாசிங்டன் சுந்தர் அணியிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டார். அவருக்கு பதில் திலக் வர்மா விளையாடியது குறிப்பிடத்தக்கது.