சென்சுரியன்: இந்திய அணிக்கு எதிரான 3வது டி20 போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி தோல்வியடைந்ததற்கான காரணம் குறித்து அந்த அணியின் கேப்டன் மார்க்ரம் கருத்து தெரிவித்துள்ளார். சென்சுரியன் மைதானத்தில் 220 ரன்களை எளிதாக சேஸ் செய்ய முடியும் என்று கூறிய அவர், பவுலிங் மற்றும் பேட்டிங்கில் கூடுதல் கவனத்துடன் செயல்பட்டிருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
இந்திய அணிக்கு எதிரான 3வது டி20 போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்துள்ளது. இந்தப் போட்டியில் இந்திய அணி தரப்பில் 220 ரன்கள் இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டது. சிறிய மைதானம் என்பதால், தென்னாப்பிரிக்கா அணியால் எளிதாக சேஸ் செய்ய முடியும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர்.

ஆனால் தென்னாப்பிரிக்கா அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 208 ரன்கள் மட்டுமே எடுத்தது. கடைசி நேரத்தில் போராடிய மார்கோ யான்சன் 16 பந்துகளில் அரைசதம் விளாசிய போதும், இந்திய அணி வீரர்களின் கட்டுக்கோப்பான பவுலிங் மற்றும் ஃபீல்டிங் காரணமாக வெற்றி பெற்றனர். தென்னாப்பிரிக்கா அணியின் பேட்ஸ்மேன்கள் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர்.
கேப்டன் மார்க்ரம், டேவிட் மில்லர், கிளாசன் உள்ளிட்ட 3 அதிரடி வீரர்களும் முக்கியமான நேரத்தில் விக்கெட்டை பறிகொடுத்தது ஆட்டத்தில் திருப்புமுனையாக அமைந்தது. இதன் காரணமாக இந்திய அணி 4 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 2-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. இன்னும் ஒரு போட்டி மட்டுமே இருப்பதால், தென்னாப்பிரிக்கா அணி கம்பேக் கொடுக்குமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்த தோல்வி குறித்து தென்னாப்பிரிக்கா கேப்டன் மார்க்ரம் பேசுகையில், மிடில் ஆர்டர் மற்றும் டெய்லண்டர்களின் பங்களிப்பால் இந்திய அணி நிர்ணயித்த இலக்கிற்கு அருகில் வந்து தோல்வியடைந்ததை நினைத்து பெருமையாகவே உள்ளது. சென்சுரியன் மைதானத்தில் நடக்கும் போட்டிகள் அனைத்திலும் சிறிய வித்தியாசங்களே வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும். சில விஷயங்களை கட்டுப்படுத்தி இருந்தாலே, வெற்றிபெற வாய்ப்புகள் அதிகரித்திருக்கும்.
பவுலிங்கில் சில ஒய்டு மற்றும் நோ-பால்கள், பவுண்டரிகளை விட்டுக் கொடுக்காமல் இருந்திருக்கலாம். இப்படி சிறிய விஷயங்களால் கூட போட்டியின் முடிவு மாறிவிடும். அதேபோல் பேட்டிங்கிலும் இன்னும் அதிகமாக மோசமான பந்துகளை தண்டித்திருக்க வேண்டும். 220 ரன்களை சேஸ் செய்வது சாதாரண விஷயமல்ல என்று சொல்லலாம். ஆனால் சென்சுரியன் மைதானத்தில் 220 ரன்களை சேஸ் செய்வது எளிதான விஷயம் தான்.
ஒவ்வொரு ஓவராக விளையாடி இருந்தாலே, வெற்றி பெற்றிருக்க முடியும். சரியான விஷயங்களை தொடர்ந்து செய்யும் போது வெல்லலாம் என்று நினைக்கிறேன். நாங்கள் சரி செய்ய வேண்டிய விஷயங்களை கவனித்திருக்கிறோம். இந்தப் போட்டியில் பேட்ஸ்மேன்களும், பவுலர்களும் தங்களின் திட்டங்களை நன்றாக செயல்படுத்தியுள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.