முதல் கோணல்
இந்த போட்டியின் தோல்விக்கு முக்கிய காரணமாக கூறப்படுவது கோலி டாஸ் வென்று பந்துவீச்சு தேர்வு செய்யாமல், பேட்டிங் தேர்வு செய்தது தான் பெங்களூரு மைதானம் சேஸிங் செய்ய ஏற்ற மைதானம் எனும் நிலையில், வீரர்களுக்கு பயிற்சி அளிக்கிறோம் எனக் கூறி போட்டியில் கோட்டை விட்டார் கோலி.
அது மட்டும் காரணம் இல்லை
ஆனால், அது மட்டுமே முக்கிய காரணமா? என்றால் நிச்சயம் இல்லை. இந்திய அணியில் பல ஓட்டைகள் உள்ளன என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டி இருக்கிறது இந்த டி2௦ போட்டி. இந்த தோல்விக்கு டாஸ் தவிர்த்து மேலும் நான்கு முக்கிய காரணங்கள் உள்ளன.
தென்னாப்பிரிக்க அணி குறித்த மதிப்பீடு
அதில் முக்கியமானது, தென்னாப்பிரிக்க அணியை குறைத்து மதிப்பிட்டது தான். இரண்டாவது டி20யில் தென்னாப்பிரிக்கா அணி சுமாராக ஆடியது. அதை வைத்து, மூன்றாம் போட்டியில் பரிசோதனை முயற்சியில் இறங்கிய கோலி, டாஸ் முடிவை தவறாக எடுத்தார்.
பேட்டிங் வரிசை
அடுத்தது, இந்திய அணியின் பேட்டிங் ஆர்டர். அதிரடி வீரர் ரிஷப் பண்ட் நான்காம் வரிசை பேட்ஸ்மேனாக இருக்க சிரமப்படுகிறார். இந்த நிலையில், அந்த இடத்தில் ஏற்கனவே தன்னை நிரூபித்த ஸ்ரேயாஸ் ஐயரை ஐந்தாம் இடத்தில் இறக்கி, பண்ட்டை நான்காம் வரிசையில் இறக்கியது தவறாக முடிந்தது. இருவரும் சொற்ப ரன்களே எடுத்தனர்.
ஹர்திக் பண்டியா
அடுத்த காரணம், ஹர்திக் பண்டியா தான். அதிரடி பேட்ஸ்மேன் ஹர்திக் பண்டியா கடைசி 7 ஓவர்கள் களத்தில் நின்றார். 18 பந்துகள் சந்தித்தார். ஆனால், வெறும் 14 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். ஒரு சிக்ஸ் கூட அடிக்கவில்லை. ஜடேஜா கூட ஒரு சிக்ஸ் அடித்து இருந்தார். ஆனால், பண்டியா எந்த முயற்சியும் எடுக்கவில்லை. இது அணிக்கு பெரிய பின்னடைவாக அமைந்தது.
இந்தியா சொதப்பல்
கடைசி மற்றும் மிக முக்கிய காரணம், இந்திய அணியின் பந்துவீச்சு படு மோசமாக இருந்தது தான். தென்னாப்பிரிக்க அணி பந்துவீச்சில் கலக்கிய நிலையில், இந்திய அணி அதில் பாதி அளவு கூட தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. இந்திய அணியால் 1 விக்கெட் மட்டுமே வீழ்த்த முடிந்தது. இதற்கு என்ன காரணம்?
தென்னாப்பிரிக்கா பந்துவீச்சு
இந்தப் போட்டியில் பந்துவீச்சு தான் முக்கிய அம்சமாக இருந்தது. தென்னாப்பிரிக்க அணி எந்த அளவில் பந்துவீச வேண்டும் என்பதை முன்பே கணித்து, இந்திய அணியின் பேட்டிங்கை ஆட்டம் காண வைத்தது.
இளம் பந்துவீச்சாளர்கள்
இளம் பந்துவீச்சாளர்கள் ஜோர்ன் பார்ச்சூன் 2, ஹென்ரிக்ஸ் 2 விக்கெட்கள் வீழ்த்தினர். முன்னணி வேகப் பந்துவீச்சாளர் ரபாடா முதலில் அதிக ரன்கள் கொடுத்தாலும் 3 விக்கெட்கள் வீழ்த்தினார்.
ஷார்ட் பந்துகள்
இந்திய அணி ஷார்ட் பந்துகளாக வீசி சொதப்பியது. இரண்டாவதாக பந்து வீசினாலும், முதலில் பந்து வீசிய தென்னாப்பிரிக்காவை பார்த்து ஆடுகளத்தை கணிக்கத் தவறியது. மூன்று பந்துவீச்சாளர்கள் சிறப்பாகவும், மூன்று பந்துவீச்சாளர்கள் படு மோசமாகவும் பந்து வீசினர்.
அதிர்ச்சி அளித்த மூவர்
நவ்தீப் சைனி, க்ருனால் பண்டியா, ஹர்திக் பண்டியா ஆகிய மூவரும் ஓவருக்கு 10 ரன்களுக்கும் மேல் வாரிக் கொடுத்து அதிர்ச்சி அளித்தனர். வாஷிங்க்டன் சுந்தர், தீபக் சாஹர், ஜடேஜா சிறப்பாக பந்து வீசி குறைந்த ரன்கள் கொடுத்தாலும், அவர்களால் விக்கெட் வீழ்த்த முடியவில்லை.