கவுகாத்தி: இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி 288 ரன்கள் முன்னிலை பெற்றும், இந்திய அணிக்கு 'ஃபாலோ-ஆன்' வழங்காமல் மீண்டும் பேட்டிங் செய்யத் தீர்மானித்துள்ளது. கையில் மிகப்பெரிய முன்னிலை இருந்தும் தென்னாப்பிரிக்க கேப்டன் டெம்பா பவுமா ஏன் இப்படி ஒரு முடிவை எடுத்தார்? இதன் பின்னணியில் உள்ள முக்கிய காரணத்தை பார்க்கலாம்.
கவுகாத்தியில் நடைபெற்று வரும் 2-வது டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்கா தனது முதல் இன்னிங்ஸில் 489 ரன்கள் குவித்தது. ஆனால், அடுத்து முதல் இன்னிங்ஸ் ஆடிய இந்திய அணி வெறும் 201 ரன்களுக்குச் சுருண்டது. இதனால் தென்னாப்பிரிக்காவுக்கு 288 ரன்கள் முன்னிலை கிடைத்தது. பொதுவாக 200 ரன்களுக்கு மேல் முன்னிலை இருந்தாலே எதிரணியை ஃபாலோ ஆன் கொடுத்து, மீண்டும் பேட்டிங் செய்ய அழைப்பது வழக்கம். ஆனால், தென்னாப்பிரிக்கா இரண்டாவது இன்னிங்ஸ் பேட்டிங்கை தொடங்கியது.

பந்துவீச்சாளர்களுக்கு ஓய்வு தேவை என்பதுதான் மிக முக்கியமான காரணம். இந்திய அணி 122 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்தாலும், கடைசி கட்டத்தில் வாஷிங்டன் சுந்தர் மற்றும் குல்தீப் யாதவ் ஜோடி தென்னாப்பிரிக்கப் பந்துவீச்சாளர்களை சோதித்து.
குறிப்பாக குல்தீப் யாதவ் மட்டும் 134 பந்துகளை எதிர்கொண்டார். இந்த ஜோடி கிட்டத்தட்ட 35 ஓவர்கள் களத்தில் நின்றது. மார்கோ ஜான்சன் கிட்டத்தட்ட 20 ஓவர்கள் வீசினார்; சைமன் ஹார்மர் 27 ஓவர்கள் வீசினார்.
வெயிலில் நீண்ட நேரம் பந்துவீசிய களைப்பு வீரர்களுக்கு இருக்கும். உடனடியாக மீண்டும் இந்தியாவை பேட்டிங் செய்ய அழைத்தால், பந்துவீச்சாளர்கள் சோர்வடைய வாய்ப்புள்ளது. எனவே, பேட்ஸ்மேன்கள் களத்தில் நின்று பவுலர்களுக்கு ஓய்வு கொடுக்கவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
அடுத்து இந்திய மண்ணில் நான்காவது இன்னிங்ஸில் பேட்டிங் செய்வது மிகவும் கடினமானது. நான்காவது நாள் முதல் பிட்ச்சில் வெடிப்பு ஏற்பட்டு, சுழற்பந்து வீச்சுக்குச் சாதகமாக மாறிவிடும். ஒருவேளை ஃபாலோ-ஆன் கொடுத்து, இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸில் சிறப்பாக விளையாடி ஒரு 200 ரன்கள் முன்னிலை பெற்றால் கூட, அதை 'சேஸ்' செய்வது தென்னாப்பிரிக்காவுக்குக் கடினமாகிவிடும். "ஏன் ரிஸ்க் எடுக்க வேண்டும்? நாமே பேட்டிங் செய்து 500 ரன்களுக்கு மேல் இலக்கு நிர்ணயித்து இந்தியாவுக்கு அழுத்தம் கொடுக்கலாம் என்பதே தென்னாப்பிரிக்க கேப்டன் பவுமாவின் திட்டம்.
இந்திய மண்ணில் ஃபாலோ-ஆன் கொடுக்காமல் அதிக ரன் முன்னிலை பெற்று இரண்டாவது இன்னிங்ஸ் ஆடிய அணிகளின் பட்டியலில் இது இரண்டாவது இடம் பெற்றுள்ளது. 2017-ல் வங்கதேசத்துக்கு எதிராக இந்தியா 299 ரன்கள் முன்னிலை பெற்றும் ஃபாலோ-ஆன் கொடுக்கவில்லை. அதற்கு அடுத்து இப்போது தென்னாப்பிரிக்கா 288 ரன்கள் முன்னிலை பெற்றும் ஃபாலோ ஆன் கொடுக்கவில்லை.
முன்னதாக, இந்திய அணியில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் (58) மற்றும் வாஷிங்டன் சுந்தர் (48) மட்டுமே ஓரளவுக்குத் தாக்குப் பிடித்தனர். மற்ற முன்னணி வீரர்கள் அனைவரும் தென்னாப்பிரிக்காவின் மார்கோ ஜான்சன் வேகத்தில் வீழ்ந்தனர். ஜான்சன் 19.5 ஓவர்கள் வீசி 48 ரன்கள் மட்டுமே கொடுத்து 6 விக்கெட்டுகளை அள்ளி சாதனை படைத்தார். குல்தீப் யாதவ் 134 பந்துகள் நின்று 19 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
தற்போது 3-ம் நாள் ஆட்ட நேர முடிவில், தென்னாப்பிரிக்கா தனது இரண்டாவது இன்னிங்ஸில் விக்கெட் இழப்பின்றி 26 ரன்கள் எடுத்துள்ளது. இதன் மூலம் அந்த அணியின் மொத்த முன்னிலை 314 ரன்களாக உயர்ந்துள்ளது. இந்திய அணி இந்த இக்கட்டான சூழலில் இருந்து மீண்டு வருமா என்று பார்க்கலாம்.