மும்பை: தென்னாப்பிரிக்க எதிரான டெஸ்ட் தொடரில் இந்தியா 0-2 என தோல்வி அடைந்திருந்த நிலையில், முதல் ஒருநாள் ஆட்டத்தில் இந்தியா 17 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. குல்தீப் இரு டெஸ்ட் போட்டிகளிலும் 8 விக்கெட்டுகள் வீழ்த்தினாலும், நான்கு இன்னிங்ஸ்களில் 63.1 ஓவர்களே வீசியிருந்தார்.
இது குறித்து பேசிய உத்தப்பா, "வாஷிங்டன் சுந்தர் ஒரு பந்துவீச்சாளராக வருவதற்கு முன் 500 ஓவர்களே வீசினார். ஆனால், அஸ்வின் தொடர்ந்து டெஸ்ட் ஆடுவதற்கு முன் 2500 ஓவர்கள் வீசியிருந்தார். பந்துவீச்சாளர்கள் தங்களின் ஸ்டைலை கண்டறிந்து, அதிக முடிவுகளை பெறும் வீரர்களாக மாற, களத்தில் நேரம் கொடுப்பது முக்கியம்."

"குல்தீப்பின் விஷயத்திலும் இது பொருந்தும். அவர் 2017 முதல் விளையாடினாலும், உண்மையில் எவ்வளவு கிரிக்கெட் ஆடியுள்ளார்? 2019க்கும் 2023-24க்கும் இடையில், அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் கிட்டத்தட்ட விளையாடவே இல்லை, அணியுடன் சுற்றுப்பயணம் மட்டுமே செய்தார்" என்று உத்தப்பா குறிப்பிட்டார். 2019 முதல் 2024 வரை குல்தீப் வெறும் எட்டு டெஸ்ட் போட்டிகளிலேயே விளையாடினார்.
"இரண்டாவது இன்னிங்ஸில் குல்தீப் அவ்வளவு பயனுள்ளதாக இல்லை என்கிறார்கள். அது அவர் டெஸ்ட் கிரிக்கெட் ஆடுவது பழக்கம் இல்லாததால் தான். ஒரு டெஸ்ட் போட்டியில் 40 ஓவர்களை தொடர்ந்து வீச அவரது உடலுக்குப் பழக்கமில்லை. ஒரு வருடம் இதைச் செய்ய வாய்ப்பு கிடைத்தால், அவரது உடல் அதற்குப் பழக்கப்பட்டு, அதே செயல்திறனுடன் பந்துவீசுவார். இங்கு நேரம் செலவழிப்பது முக்கியம்" என்றார்.
தனது எட்டு வருட கிரிக்கெட் வாழ்க்கையில், குல்தீப் மொத்தம் 17 டெஸ்ட் போட்டிகளில் மட்டும் ஆடி, 482.1 ஓவர்கள் வீசியுள்ளார். ஒரு டெஸ்டுக்கு 28 ஓவர்கள் மற்றும் ஒரு இன்னிங்ஸுக்கு 14 முதல் 15 ஓவர்கள் என சராசரியாக உள்ளது.
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டிக்குப் பிறகு விராட் கோலியை ராபின் உத்தப்பா பாராட்டினார். ஒருநாள் போட்டிகளில் கோலி தனது பேட்டிங்கிற்கு ஒரு தெளிவான செயல் திட்டத்தைக் கொண்டிருப்பதாக அவர் கூறினார். இது குறித்து பேசிய அவர், "அவரது செயல் திட்டம் மிகவும் தெளிவானது. அது எந்தக் குழப்பமும் இல்லாதது. இன்னிங்ஸை எவ்வாறு வேகப்படுத்துவது என்பதை அவர் அறிவார்."
"மேலும் பார்ட்னர்ஷிப்களை உருவாக்கும் விஷயத்தையும் தனது திட்டத்தில் சேர்த்துள்ளார். இது அவரை இன்னும் ஆபத்தானவராகக் காட்டுகிறது" என்று உத்தப்பா வியந்து கூறினார்.முதல் ஒருநாள் போட்டியில், கோலி ரோஹித் ஷர்மாவுடன் இணைந்து 136 ரன்கள் பார்ட்னர்ஷிப்பையும், கேஎல். ராகுலுடன் இணைந்து 76 ரன்கள் கொண்ட மற்றொரு முக்கிய பார்ட்னர்ஷிப்பையும் அமைத்தார். இதனால் தான் இந்திய அணி 349 ரன்கள் குவிக்க காரணமாக அமைந்தது.