கவுஹாத்தி: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோல்வியை தழுவியதற்கு முக்கிய காரணம் பிளேயிங் லெவனை சரியாக தேர்வு செய்யாதது தான் என்று விமர்சனம் இருந்தது. நான்கு சுழற் பந்து வீச்சாளர்களை சேர்த்ததன் மூலம் சாய் சுதர்சன் போன்ற பேட்ஸ்மேனை வெளியே அனுப்பியது மிகப்பெரிய பின்னடைவை இந்தியாவுக்கு ஏற்படுத்தியது.
இந்த நிலையில் கவுஹாத்தியில் நடைபெற்று வரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில்,கம்பீர் சில தவறை திருத்தி இருக்கிறார். ஆனால் மீண்டும் ஒரு தவறை செய்திருக்கிறார். அது என்னவென்று தற்போது பார்க்கலாம். சுப்மன் கில்லுக்கு பதில் ஒரு பேட்ஸ்மேன் வேண்டும் என சாய் சுதர்சன் சேர்க்கப்பட்டிருக்கிறார்.

ஆனால் அக்சர் பட்டேல் நீக்கப்பட்டு அவருக்கு பதில் நிதிஷ்குமார் சேர்க்கப்பட்டிருக்கிறார். நிதிஷ் குமார் ரெட்டி கடந்த ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சதம் அடித்த பிறகு எந்த ஒரு பெரிய தாக்கத்தையும் பேட்டிங், பந்துவீச்சு என இரண்டிலும் ஏற்படுத்தவில்லை.
எட்டாவது வீரராக களம் இறங்கி 20 ரன்கள் அடிப்பதற்கு ஒரு பேட்ஸ்மேன் தேவையா என்ற கேள்வி எழுந்துள்ளது.
பந்துவீச்சிலும் அவர் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. தற்போது வரை நிதிஷ்குமார் ரெட்டி 4 ஓவர்கள் வீசி இருக்கிறார். அதில் 21 ரன்களை விட்டுக் கொடுத்திருக்கிறார். இது இந்தியாவுக்கு மைனஸ் ஆக பார்க்கப்படுகிறது. பும்ரா மற்றும் சிராஜ் ஆகியோர் கட்டுக்கோப்பாக பந்து வீசி ரன்களை எடுக்க விடாமல் தென்ஆப்பிரிக்காவை தடுத்தனர்.
ஆனால் அவர்கள் ஏற்படுத்திய அழுத்தத்தை நிதிஷ் குமார் ரெட்டி குறைக்கும் வகையில் பந்து வீசி இருக்கிறார். இந்தியா மூன்றாவதாக ஒரு ஆல் ரவுண்டரை தான் வேகப்பந்துவீச்சாளராக பயன்படுத்தப் போகிறார்கள் என்றால், அதற்கு ஒரு முழு நேர வேகப்பந்துவீச்சாளரையே பயன்படுத்தி இருக்கலாம் என்று கிரிக்கெட் வல்லுனர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
இந்த இடத்தில் ஆகாஷ் தீப்போ, இல்லை அணியில் தேர்வு செய்யப்படாத முகமது சமியோ இருந்திருந்தால் அது நிச்சயம் இந்தியாவுக்கு சாதகமாக அமைந்திருக்கும் என்றும் அவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். நிதீஷ் குமார் ரெட்டி பேட்டிங்கில் அடிக்கக்கூடிய அதே ஸ்கோரை குல்தீப் அல்லது ஆகாஷ் தீப் நிச்சயம் எடுப்பார்கள் என்பது இங்கு கவனிக்கத்தக்கது.
ஒருவேளை நிதிஷ் குமார் பென் ஸ்டோக் போல் அபாரமாக பேட்டிங் செய்தாலும், இல்லை அவரைப் போலவே பந்துவீசி முக்கிய விக்கெட்டுகளை எடுத்தாலும் அவரை அணியில் வைத்திருப்பதில் ஒரு நியாயம் இருக்கின்றது. ஆனால் இப்படி எந்த விஷயமும் செய்யாத ஒரு வீரரை தேவையில்லாமல் பிளேயிங் லெவனில் கொண்டு வர வேண்டிய அவசியம் என்ன என்று கேள்வியும் எழுந்துள்ளது.
ஒருவேளை பேட்டிங்கைதான் பலப்படுத்த வேண்டும் என்று முடிவு எடுத்து இருந்தால், அதற்கு ஒரு பேட்டரை நிதிஷ்குமார் ரெட்டிக்கு பதிலாக சேர்த்திருக்கலாமே என்று கேள்வியும் எழுந்துள்ளது. வாய்ப்புக்காக தேவுதத் படிக்கல் அணியில் உள்ள நிலையில் அவரை கூடுதல் பேட்டராக சேர்த்து இருக்கலாம் என்றும் கிரிக்கெட் வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.