பார்படாஸ்: டி20 உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்கா அணியை எதிர்த்து இந்திய அணி விளையாடவுள்ளது. இந்த போட்டிக்காக இரு அணிகளும் சிறப்பாக தயாராகி வருகின்றனர். இந்த போட்டியில் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் சிவம் துபேவை நீக்கிவிட்டு அந்த இடத்தில் சஞ்சு சாம்சனை ஆட வைக்க வேண்டும் என்று ரசிகர்கள் அறிவுறுத்தி வருகின்றனர்.
ஏனென்றால் இங்கிலாந்து அணிக்கு எதிரான அரையிறுதி போட்டியில் சிவம் துபே டக் அவுட்டாகி வெளியேறினார். இருந்தாலும் இதுவரை 7 இன்னிங்ஸ்களில் விளையாடி 107 ரன்களை சேர்த்துள்ளார். விராட் கோலியுடன் ஒப்பிடும் போது கூடுதலாக 31 ரன்களை சேர்த்துள்ளார். ஸ்பின்னர்களை விளாசும் திறமை காரணமாக சிவம் துபேவுக்கு பிளேயிங் லெவனில் வாய்ப்பு அளிக்கப்பட்டு வருகிறது.

ஆனால் ஸ்பின்னர்கள் சிவம் துபே வருவதற்கு முன்பாகவே ஓவர்களை வீசி முடித்துவிடுகின்றனர். இதனால் சிவம் துபேவின் தேவை இல்லை என்று பார்க்கப்படுகிறது. இதனால் வேகப்பந்துவீச்சாளர்களை வெளுப்பதற்கு சஞ்சு சாம்சனை பிளேயிங் லெவனில் சேர்த்து தென்னாப்பிரிக்கா அணிக்கு சர்ப்ரைஸ் கொடுக்க வேண்டும் என்று விமர்சகர்கள் பலரும் கூறி வருகின்றனர்.
அதேபோல் தென்னாப்பிரிக்கா அணியை பொறுத்தவரை பவர் பிளே ஓவர்களில் எய்டன் மார்க்ரம் அட்டாக்கில் வருகிறார். பவர் பிளே ஓவர்களுக்கு பின் மஹாராஜ், 10 ஓவர்கள் முடிவடைந்த பின்னர் ஷம்சி ஆகியோரும் அட்டாக்கில் வருகின்றனர். கிட்டத்தட்ட 15 ஓவர்கள் வரை ஸ்பின்னர்களை தென்னாப்பிரிக்கா அணி பயன்படுத்தி வருகிறது.
இதனால் ரிஷப் பண்ட் விரைவாக ஆட்டமிழந்துவிட்டால், சிவம் துபேவின் தேவை இந்திய அணிக்கு அவசியமாக உள்ளது. அதேபோல் மஹாராஜ், ஷம்சி இருவரையும் சிவம் துபேவால் எளிதாக அட்டாக் செய்ய முடியும் என்று பார்க்கப்படுகிறது. இதனால் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பிளேயிங் லெவனில் எந்த மாற்றத்தையும் செய்யாமல் இருக்க வேண்டும் என்று நிபுணர்கள் கூறி வருகின்றனர்.
ஸ்பின்னர்களை அட்டாக் செய்யும் பட்சத்தில் தென்னாப்பிரிக்கா அணி வேறு வழியின்றி பவுலிங் திட்டத்தை மாற்ற வேண்டிய சூழல் வரும். அதேபோல் டெத் ஓவர்களில் வீச வேண்டிய ரபாடா சிவம் துபேவுக்கு ஒரு ஓவரை வீசினால், ஹர்திக் பாண்டியாவுக்கு கடைசி நேரத்தில் எளிதாக ரன்களை சேர்க்க முடியும் என்று பார்க்கப்படுகிறது.