மும்பை: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை இந்திய அணி முழுமையாக தோல்வியுற்று இருக்கிறது. இதன் மூலம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் இந்திய அணி ஐந்தாவது இடத்திற்கு சரிந்து இருக்கிறது.
தற்போது இந்திய அணியின் வெற்றி சதவீதம் 48.15 என்ற அளவில் இருக்கின்றது. தற்போது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சைக்கில் பாதி தூரத்தை கடந்திருக்கிறது. இந்தியாவின் இந்த சைக்கிளில் மொத்தம் 18 போட்டிகள் உள்ளன. இதில் ஒன்பது போட்டிகள் தற்போது முடிவடைந்து இருக்கிறது.

மற்ற அணிகள் இன்னும் பெரிய அளவு போட்டிகளில் விளையாட வில்லை. இன்னும் சொல்லப்போனால் நியூசிலாந்து அணி நடப்பு சைக்கிளில் இன்னும் ஒரு போட்டியில் கூட விளையாடவில்லை. இலங்கை மற்றும் பாகிஸ்தான் ஆகிய அணிகள் தலா ஒரு போட்டிகள் விளையாடியுள்ள நிலையில், இங்கிலாந்து அணி இரண்டாவது போட்டியை விளையாடி இருக்கிறது.
கடந்த இரண்டு சைக்கில் வைத்து பார்க்கும் போது புள்ளி பட்டியலில் 60 முதல் 65 வெற்றி சதவீதம் வைத்திருக்கும் அணிகள் தான் இறுதிப்போட்டிக்கு செல்கிறது. 2021- 23 சைக்கிளில் இந்திய அணி 58.8 வெற்றி சதவீதத்துடன் இரண்டாவது இடத்தை பிடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இதனால் இந்திய அணி 60 சதவீதத்தை எட்ட வேண்டும் என்றால் 130 புள்ளிகளை பெற வேண்டும். அந்த வகையில் இந்திய அணிக்கு இன்னும் 78 புள்ளிகள் தேவைப்படுகிறது. இதில் மொத்தம் ஒன்பது டெஸ்ட் போட்டிகள் எஞ்சி உள்ளன. இதில் இரண்டு டெஸ்ட் போட்டியில் இலங்கை மற்றும் நியூசிலாந்துக்கு எதிராக அந்நிய மண்ணிலும் ஐந்து டெஸ்ட் போட்டிகள் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சொந்த மண்ணிலும் நடைபெற உள்ளது.
இதனால் எஞ்சிய ஒன்பது போட்டிகளில் இந்திய அணி 7 போட்டிகளில் வெற்றி, இரண்டு போட்டிகளில் டிரா கண்டால் முதல் இரண்டு இடத்தை பிடிக்க அதிக வாய்ப்பு இருக்கிறது. இலங்கை மண்ணில் இந்தியா நல்ல டெஸ்ட் ரெக்கார்டு வைத்திருக்கிறது. ஆனால் நியூசிலாந்து தொடர் கொஞ்சம் கடினமாக இருக்கும். இங்கு கடைசியாக 2009 ஆம் ஆண்டுக்குப் பிறகு இந்திய அணி வெற்றியை பெற்றது இல்லை.
இதனால் இந்த இரண்டு தொடரும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும். இதேபோன்று 2027 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் இந்தியாவுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும். ஆஸ்திரேலியாவை பொறுத்தவரை சொந்த மண்ணில் இன்னும் வங்கதேசம் மற்றும் நியூசிலாந்துக்கு எதிராக தலா மூன்று டெஸ்ட் போட்டிகள் உள்ளன.
இதனால் இந்தியா தொடருக்கு முன்பே அவர்கள் பெரும்பான்மையான புள்ளிகளை பெற்று விடுவார்கள். இதேபோன்று தென்னாப்பிரிக்க அணியும் இலங்கைக்கு எதிராக 2027 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் டெஸ்ட் தொடரில் அந்நிய மண்ணில் விளையாட உள்ளது. அதற்கிடையில் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய அணிகளுக்கு எதிராக தலா மூன்று டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. இதனால் இந்தியாவின் வாய்ப்பு கொஞ்சம் கேள்விக்குறி தான் என்றாலும் முற்றிலும் இன்னும் வாய்ப்பை இழக்கவில்லை.