அகமதாபாத்: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 2026 டி20 உலகக்கோப்பை சூப்பர் 8 போட்டியில் இந்திய அணி 76 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியைச் சந்தித்தது. இந்தத் தோல்வி இந்திய அணியின் பேட்டிங் வரிசை குறித்த, குறிப்பாகத் தொடக்க ஆட்டக்காரர்கள் மீதான கவலையை அதிகரித்துள்ளது. இந்நிலையில், அடுத்த போட்டியில் சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு வழங்கப்படலாம் என இந்திய அணியின் உதவிப் பயிற்சியாளர் ரியான் டென் டோஸ்கேட் சூசகமாகத் தெரிவித்துள்ளார்.
அகமதாபாத்தில் நடைபெற்ற தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் 188 ரன்கள் என்ற இலக்கை நோக்கித் துரத்திய இந்திய அணி 111 ரன்களுக்குச் சுருண்டது. தொடர் முழுவதும் இந்திய அணியின் தொடக்க ஆட்டம் பெரும் ஏமாற்றத்தையே அளித்து வருகிறது. குறிப்பாக இளம் வீரர் அபிஷேக் சர்மா விளையாடிய 4 இன்னிங்ஸ்களில் 3 முறை டக் அவுட் ஆகியுள்ளார். மற்றொரு வீரரான திலக் வர்மாவும் சொல்லிக்கொள்ளும்படி ரன் குவிக்கவில்லை.

இந்தப் போட்டிக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய உதவிப் பயிற்சியாளர் ரியான் டென் டோஸ்கேட், அணியின் தொடக்க ஆட்டக்காரர்களின் தடுமாற்றம் குறித்துப் பேசினார். "கடந்த 5 போட்டிகளில், அமெரிக்காவுக்கு எதிரான போட்டியைத் தவிர மற்ற 4 போட்டிகளிலும் எதிரணிகள் பகுதிநேர சுழற்பந்து வீச்சாளர்களை வைத்துத் தொடக்கத்திலேயே விக்கெட் வீழ்த்தி விடுகின்றனர். ஒவ்வொரு இன்னிங்ஸிலும் முதல் விக்கெட்டை ரன் ஏதும் எடுக்காமலோ அல்லது குறைவான ரன்களிலோ இழப்பது பின்வரிசை வீரர்களுக்குக் கடும் அழுத்தத்தை ஏற்படுத்துகிறது" என்று அவர் ஒப்புக்கொண்டார்.
எஞ்சியுள்ள இரண்டு சூப்பர் 8 போட்டிகள் மிகவும் முக்கியமானவை என்பதால், அணியில் மாற்றம் செய்வது குறித்து விவாதிக்கப்படும் என்று பயிற்சியாளர் தெரிவித்தார். "அணியில் பல இளம் வீரர்கள் உள்ளனர். கடந்த 18 மாதங்களாகச் சிறப்பாகச் செயல்பட்ட வீரர்களுக்குத் தொடர்ந்து வாய்ப்பு கொடுப்பதா அல்லது மாற்றங்களைச் செய்வதா என்ற குழப்பம் உள்ளது."
"சஞ்சு சாம்சன் ஒரு அற்புதமான வீரர். அணியின் தொடக்க வரிசையில் ஒரு வலது கை பேட்ஸ்மேன் இருப்பது உத்தி ரீதியாக எங்களுக்கு உதவும். எனவே, அடுத்த சில நாட்களில் இது குறித்துத் தீவிரமாக ஆலோசிக்கப்படும்" என்று அவர் கூறினார். நமீபியாவுக்கு எதிரான போட்டியில் சஞ்சு சாம்சன் 8 பந்துகளில் 22 ரன்கள் எடுத்தது குறிப்பிடத்தக்கது.
சஞ்சு சாம்சனை அணிக்குள் கொண்டு வரத் திட்டமிட்டாலும், அவரது சமீபத்திய புள்ளிவிவரங்கள் அணி நிர்வாகத்திற்குச் யோசனையை ஏற்படுத்தியுள்ளன. 2025 ஆம் ஆண்டு முதல் தொடக்க வீரராகக் களமிறங்கிய 12 இன்னிங்ஸ்களில் அவர் மொத்தம் 156 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். அவரது சராசரி வெறும் 13 ஆக உள்ளது. இந்த 12 இன்னிங்ஸ்களில் இரண்டு முறை மட்டுமே அவர் பவர் பிளே ஓவர்களை முழுமையாக எதிர்கொண்டுள்ளார்.
பிப்ரவரி 26 ஆம் தேதி சென்னையில் நடைபெறவுள்ள ஜிம்பாப்வே அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. தொடக்க வரிசையை வலுப்படுத்த சஞ்சு சாம்சனை மீண்டும் களமிறக்குவதா அல்லது அபிஷேக் சர்மாவுக்கே மீண்டும் ஒரு வாய்ப்பு கொடுப்பதா என்ற இக்கட்டான நிலையில் இந்திய அணி நிர்வாகம் உள்ளது.