ஜொகன்னஸ்பெர்க்: தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பதிவு செய்துள்ளது.
தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி டி20 தொடரை 1-1 என்ற கணக்கில் சமன் செய்த நிலையில், தற்போது ஒருநாள் கிரிக்கெட் தொடர் தொடங்கியுள்ளது. இந்த ஒருநாள் தொடரில் இந்திய அணி கேஎல் ராகுல் தலைமையில் களமிறங்கியுள்ளது. இந்த போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி கேப்டன் எய்டன் மார்க்ரம் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

இதனை தொடர்ந்து இந்திய அணி தரப்பில் ருதுராஜ் கெய்க்வாட் - சாய் சுதர்சன் இருவரும் களமிறங்கினர். ருதுராஜ் கெய்க்வாட் நிதானம் காட்டிய நிலையில், சாய் சுதர்சன் முதல் பந்திலேயே பவுண்டரியுடன் தொடங்கினார். இதையடுத்து சரியான ஃபீல்டர் இல்லாத இடத்தில் தேடி தேடி பவுண்டரிகளை விளாசினார். இதனிடையே ருதுராஜ் கெய்க்வாட் 5 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். பின்னர் சாய் சுதர்சனுடன் ஸ்ரேயாஸ் ஐயர் கூட்டணி அமைத்தார்.
இவர்கள் இருவரும் அதிரடியாக சில பவுண்டரிகளை விளாசிய நிலையில், இந்திய அணி வெற்றியை நோக்கி எளிதாக முன்னேறியது. சிறப்பாக ஆடிய சாய் சுதர்சன் 41 பந்துகளில் அரைசதம் அடிக்க, இன்னொரு பக்கம் அதிரடியாக ஆடிய ஸ்ரேயாஸ் ஐயர் 44 பந்துகளில் அரைசதம் அடித்தார். அதன்பின் ஸ்ரேயாஸ் ஐயர் 52 ரன்களில் ஆட்டமிழந்தார்.
சாய் சுதர்சன் - திலக் வர்மா இருவரும் சேர்ந்து வெற்றிகரமான ஆட்டத்தை முடித்தனர். இதன் மூலம் இந்திய அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றது. கடைசி வரை களத்தில் இருந்த சாய் சுதர்சன் 43 பந்துகளில் 9 பவுண்டரிகள் உட்பட 55 ரன்களை விளாசி அசத்தினார். இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.