நவி மும்பை: 2025 மகளிர் ஒருநாள் உலகக்கோப்பையை இந்திய அணி வென்று வரலாறு படைத்திருக்கிறது. முதன்முறையாக இந்திய மகளிர் அணி உலகக்கோப்பையை வென்றுள்ள இந்த வெற்றிக்கு முக்கிய காரணம் என்ன? இந்த இறுதிப் போட்டியில் இந்திய அணி கேப்டன் ஹர்மன்ப்ரீத் கௌர் எடுத்த ஒரு முடிவு, எப்படிப் போட்டியின் போக்கையே மாற்றியது என்பது குறித்துப் பார்க்கலாம்.
இந்தப் போட்டியில் முதலில் இந்திய அணியும் பேட்டிங் செய்தது. நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் இந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 298 ரன்கள் எடுத்தது. இது ஒரு நல்ல ஸ்கோராக இருந்தாலும், இந்திய அணி முதலில் பேட்டிங் செய்த விதத்தைப் பார்த்தபோது, 320 முதல் 350 ரன்கள் வரை எடுக்க வாய்ப்பு இருப்பதாகவே பலரும் எதிர்பார்த்தனர். ஆனால், கடைசி 15 ஓவர்களில் விக்கெட் வீழ்ச்சி ஏற்பட்டதால், இந்திய அணியால் 300 ரன்களைக் கூடத் தாண்ட முடியவில்லை. இது ஒரு வகையில் மனதளவில் பின்னடைவை ஏற்படுத்தியது.

299 ரன்கள் என்ற இலக்கை நோக்கி தென்னாப்பிரிக்கா பேட்டிங் ஆடியது. தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் லாரா வோல்வார்ட் ஒருபுறம் நிலையாக நின்று ரன் சேர்த்தார். இடையே நான்காம் வரிசையில் இறங்கிய ஸூன் லூஸ் அவருடன் இணைந்து கூட்டணியை அமைத்தார். அதனால் இந்திய அணிக்கு அழுத்தம் அதிகரித்தது.
அந்த நேரத்தில் இந்திய அணியில் ஆறு பந்துவீச்சாளர்கள் வரை பந்துவீசி இருந்தனர். இந்த நிலையில், ஏழாவது பந்துவீச்சாளராக ஷஃபாலி வர்மாவை பந்துவீச அழைத்தார் இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கௌர். ஷஃபாலி வர்மா இதற்கு முன் சர்வதேசப் போட்டிகளில் அதிக முறை பந்துவீசியதில்லை; அவர் பகுதி நேரப் பந்துவீச்சாளர் மட்டுமே. இந்த நிலையில், அவருக்கு உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் திடீரென பந்துவீச வாய்ப்பளிப்பது சரியாக இருக்குமா என்ற எண்ணம் பலருக்கும் இருந்தது.
ஆனால், தான் பந்துவீசிய முதல் ஓவரிலேயே ஸூன் லூஸ் விக்கெட்டை வீழ்த்தித் திருப்புமுனையை ஏற்படுத்தினார் ஷஃபாலி வர்மா. தான் வீசிய இரண்டாவது ஓவரில் மரிசான் கேப் விக்கெட்டையும் வீழ்த்தினார். அடுத்தடுத்து அவர் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தியதால், தென்னாப்பிரிக்க அணி நான்கு விக்கெட்டுகளை இழந்து நிதான ஆட்டத்துக்கு மாறியது.
அதன் பிறகுதான் தீப்தி ஷர்மா வரிசையாக விக்கெட் வேட்டையாடினார். அவர் 9.3 ஓவர்களில் 39 ரன்களை விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகள் வீழ்த்தி இருந்தார். பகுதி நேரப் பந்துவீச்சாளராக வந்த ஷஃபாலி வர்மா 7 ஓவர்கள் பந்துவீசி 36 ரன்கள் விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார்.
இந்த ஒரு முடிவு இந்த போட்டியில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது என்றே சொல்லலாம். இந்திய அணியின் பேட்டிங் சிறப்பாக இருந்தது. ஆனால், அதைவிட, பந்துவீச்சில் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கௌர் செய்த இந்த ஒரு விஷயம் இந்திய அணியின் வெற்றியை உறுதி செய்தது. பின்னர், தென்னாப்பிரிக்க அணி 45.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 246 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்திய அணி 52 ரன்கள் வித்தியாசத்தில் இந்த இறுதிப் போட்டியில் வென்று உலகக்கோப்பையையும் கைப்பற்றியது.