நவி மும்பை: மகளிர் உலகக்கோப்பை இறுதிப்போட்டி ஒருபுறம் அனல் பறக்க நடந்துகொண்டிருக்க, மறுபுறம் தென்னாப்பிரிக்க அதிபர் சிரில் ரமபோசா தங்கள் நாட்டு அணிக்கு வாழ்த்து சொல்கிறேன் என செய்த ஒரு செயல், சமூக வலைதளங்களில் புயலைக் கிளப்பியுள்ளது. இந்தியாவுக்கு எதிரான இறுதிப் போட்டியில் களமிறங்கியுள்ள தனது நாட்டு மகளிர் கிரிக்கெட் அணிக்கு வாழ்த்து தெரிவித்து அவர் வெளியிட்ட வீடியோவில், கிரிக்கெட் ஜெர்சிக்குப் பதிலாக கால்பந்து அணியின் ஜெர்சியை அணிந்திருந்தது, பெரும் கேலிக்கும், விமர்சனத்திற்கும் உள்ளானது. இதில் இன்னொரு நகைச்சுவையும் நடந்தது.
இந்த வீடியோ, வீராங்கனைகளை ஊக்கப்படுத்தும் நோக்கில் வெளியிடப்பட்டது. ஆனால், அது எதிர்பார்த்த காரணங்களுக்காக ரசிகர்கள் மத்தியில் பரவாமல், இந்த ஆடை குளறுபடிக்காகவே பேசுபொருள் ஆனது. ஒரு நாட்டின் அதிபர், கிரிக்கெட் அணிக்கு வாழ்த்து சொல்லும்போது, கால்பந்து ஜெர்சியை அணிந்திருந்ததை பலராலும் நம்ப முடியவில்லை. "இவ்வளவு பெரிய தவறு எப்படி நடந்தது?" என்று பலரும் சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இந்த ஆடை குளறுபடி ஒருபுறம் இருந்தாலும், அதிபர் ரமபோசாவின் வாழ்த்துச் செய்தி, லாரா வோல்வார்ட் தலைமையிலான அணிக்கு முழு ஆதரவையும், பெருமையையும் வெளிப்படுத்துவதாகவே இருந்தது. அந்த வீடியோவில் அவர், "மைதானத்தில் சுமார் 40,000 இந்திய ரசிகர்கள் இருப்பார்கள். அவர்கள் கிரிக்கெட் மீது எவ்வளவு பற்று கொண்டவர்கள் என்பது உங்களுக்குத் தெரியும். ஆனால், அது உங்களை ஒருபோதும் சோர்வடையச் செய்யவோ, ஊக்கமிழக்கச் செய்யவோ கூடாது" என்று வீராங்கனைகளுக்குத் தைரியமூட்டினார்.
ஒரு கட்டத்தில், அதிபர் தனது கால்பந்து ஜெர்சியைப் பிடித்து இழுத்தவாறே, "தென்னாப்பிரிக்க ரசிகர்கள் இதை வாங்கப் போகிறார்கள்" என்று குறிப்பிட்டார். அதாவது தென்னாப்பிரிக்க மகளிர் கிரிக்கெட் அணி உலகக்கோப்பை வென்றால் ரசிகர்கள் அவர்களின் ஆடைகளை வாங்கி அணிவார்கள் என குறிப்பிட நினைத்த அதிபர், தான் அணிந்து இருந்த தென்னாப்பிரிக்க கால்பந்து அணியின் ஆடையை சுட்டிக் காட்டி அதை சொன்னார். இது நகைச்சுவையாக மாறி, சமூக வலைதளத்தில் கேலிக்கு உள்ளானது.
நவி மும்பையில் நடைபெற்ற இறுதிப் போட்டியில், டாஸ் வென்று முதலில் பந்துவீசியது தென்னாப்பிரிக்கா. இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. இந்திய அணியின் தொடக்க வீராங்கனை ஷஃபாலி வர்மா, தனது மூன்று ஆண்டு கால காத்திருப்புக்கு முற்றுப்புள்ளி வைத்து, அபாரமாக ஆடி ஒருநாள் போட்டிகளில் தனது ஐந்தாவது அரை சதத்தைப் பதிவு செய்தார். அவர் 49 பந்துகளில் 5 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸருடன் 50 ரன்களைக் கடந்தார். துணை கேப்டன் ஸ்மிருதி மந்தனாவுடன் இணைந்து, முதல் விக்கெட்டுக்கு ஷஃபாலி 104 ரன்கள் குவித்தது குறிப்பிடத்தக்கது.