சென்சுரியன்: தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான 3வது டி20 போட்டியில் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் ஒரு மாற்றம் நடக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சுழற்பந்துவீச்சாளர் ரவி பிஷ்னாய்-க்கு ஓய்வு அளிக்கப்பட்டு அவரது இடத்தில் இடதுகை வேகப்பந்துவீச்சாளரான யாஷ் தயாள் களமிறங்கலாம் என்று கூறப்படுகிறது.
இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 3வது டி20 போட்டி இன்று சென்சுரியன் மைதானத்தில் நடக்கவுள்ளது. ஏற்கனவே நடந்த முதல் டி20 போட்டியில் இந்திய அணியும், 2வது டி20 போட்டியில் தென்னாப்பிரிக்கா அணியும் வென்றன. இதனால் 3வது டி20 போட்டியில் வென்று எந்த அணி முன்னிலை பெறும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

சென்சுரியன் மைதானத்தை பொறுத்தவரை பேட்ஸ்மேன்களுக்கு சாதகமான பிட்ச் என்று பார்க்கப்படுகிறது. ஏனென்றால் இதுவரை நடந்த டி20 போட்டிகளில் பேட்டிங் சராசரியாக 9.46ஆக பதிவாகியுள்ளது. தென்னாப்பிரிக்காவில் உள்ள மைதானங்களில் இதுதான் உச்சமாக உள்ளது. அதேபோல் முதல் பேட்டிங், 2வது பேட்டிங் செய்த அணிகளின் வெற்றி சதவிகிதத்திலும் பெரிய மாற்றங்கள் இல்லை.
இதனால் வெற்றி, தோல்வியில் டாஸ் பெரிய பங்கு வகிக்காது என்று சொல்லப்பட்டு வருகிறது. வேகப்பந்துவீச்சாளர்களுக்கு உதவி கிடைத்தாலும், இந்திய அணி வருண் சக்கரவர்த்தி மற்றும் அக்சர் படேலுடன் நிச்சயம் களமிறங்கும். இந்தப் போட்டியில் இந்திய அணியின் பிளேயிங் லெவனை பொறுத்தவரை தொடக்க வீரர்களான சஞ்சு சாம்சன் மற்றும் அபிஷேக் சர்மா இருவரும் களமிறங்குவார்கள் என்று எதிர்பார்க்கலாம்.
அதேபோல் மிடில் ஆர்டரில் சூர்யகுமார் யாதவ், நம்பர் 4ல் திலக் வர்மா, நம்பர் 5ல் ஹர்திக் பாண்டியா ஆகியோர் களமிறங்கவே அதிக வாய்ப்புகள் உள்ளது. வழக்கம் போல் ஃபினிஷர் ரோலில் ரிங்கு சிங், நம்பர் 7ல் அக்சர் படேல் ஆகியோர் களமிறங்குவார்கள். தொடர்ந்து அர்ஷ்தீப் சிங், ஆவேஷ் கான், வருண் சக்கரவர்த்தி ஆகியோர் இடம்பிடிப்பார்கள்.
ஆனால் 3வது ஸ்பின்னராக செயல்பட்டு வரும் ரவி பிஷ்னாய் இந்தப் போட்டியில் விளையாடுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏனென்றால் பிட்ச் நிச்சயம் கூடுதல் பவுன்ஸ் உடன் வேகப்பந்துவீச்சாளர்களுக்கு தான் அதிக உதவியாக இருக்கும். இதனால் இந்தப் போட்டியில் யாஷ் தயாள் களமிறங்க அதிக வாய்ப்புகள் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 2 போட்டிகளில் ரவி பிஷ்னாய் மிகச்சிறப்பாக பவுலிங் செய்திருந்தாலும், 3 ஸ்பின்னர்களுடன் இந்திய அணி களமிறங்குவது பின்னடைவை கொடுக்கும். அதுமட்டுமல்லாமல் வேகப்பந்துவீச்சில் இந்திய அணி அர்ஷ்தீப் சிங்கை மட்டுமே நம்பி இருக்க வேண்டிய தேவை உள்ளது. ஆவேஷ் கான் மற்றும் ஹர்திக் பாண்டியா அனைத்து நேரங்களிலும் சிறப்பாக செயல்பட தவறுவதால், யாஷ் தயாள் அணிக்குள் வரலாம் என்று பார்க்கப்படுகிறது.