டர்பன்: தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான 2வது டி20 போட்டியில் இந்திய அணியின் தொடக்க வீரர்களான ஜெய்ஸ்வால் மற்றும் சுப்மன் கில் இருவரும் டக் அவுட்டான சம்பவம் ரசிகர்களிடையே கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 2வது டி20 தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி கேப்டன் எய்டன் மார்க்ரம் பந்துவீச்சை தேர்வு செய்தார். போட்டிக்கு முன்பாக மழை பெய்ததால், ஆடுகளம் தார்பாய் மூலம் அதிக நேரம் மூடப்பட்டிருந்தது. இதனால் பிட்சில் டர்ன் இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்திய அணியில் தரப்பில் தொடக்க வீரர் ருதுராஜ் கெய்க்வாட் உடல்நிலை பிரச்சனை காரணமாக சேர்க்கப்படவில்லை என்று கேப்டன் சூர்யகுமார் யாதவ் கூறினார். அதேபோல் குல்தீப் யாதவ் அணிக்கு திரும்பிய நிலையில், நம்பர் 1 டி20 பவுலரான ரவி பிஷ்னாய் நீக்கப்பட்டார். இதன் காரணமாக யஷஸ்வி ஜெய்ஸ்வால் - சுப்மன் கில் கூட்டணி தொடக்க கூட்டணியாக களமிறங்கியது.
தென்னாப்பிரிக்கா அணியின் மார்கோ யான்சன் வீசிய முதல் ஓவரிலேயே யஷஸ்வி ஜெய்ஸ்வால் டக் அவுட்டாகி ஆட்டமிழக்க, தொடர்ந்து வில்லியம்ஸ் வீசிய 2வது ஓவரின் கடைசி பந்தில் சுப்மன் கில்லும் டக் அவுட்டாகி வெளியேறினார். இதனால் இந்திய அணி 6 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
உலகக்கோப்பை தொடருக்கு பின் களமிறங்கிய சுப்மன் கில் முதல் போட்டியிலேயே டக் அவுட்டாகி இருப்பது பல்வேறு விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது. ஆசிய ஆடுகளங்களை தவிர்த்து சுப்மன் கில் வெளிநாடுகளில் பெரியளவில் ரன்களை சேர்க்கவில்லை. இதனால் சுப்மன் கில்லை ரசிகர்கள் காட்டமாக விமர்சித்து வருகின்றனர்.
யஷஸ்வி ஜெய்ஸ்வால் முதல்முறையாக தென்னாப்பிரிக்கா மண்ணில் விளையாடுவதால், அவர் தடுமாறியதில் எந்த ஆச்சரியமும் இல்லை. ஆனால் இந்திய அணியின் நட்சத்திர வீரராக உள்ள சுப்மன் கில் முதல் போட்டியிலேயே டக் அவுட்டாகி ஆட்டமிழந்துள்ளார். இதனால் இவரது இடத்தில் ருதுராஜ் கெய்க்வாட்டை அடுத்த போட்டியில் களமிறக்க வேண்டும் என்று ரசிகர்கள் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.