ராஞ்சி: தென்னாபிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணி 2 போட்டிகளிலும் தோல்வியை தழுவி தொடரை முழுமையாக இழந்தது. இந்த போட்டியில் இந்தியாவின் தோல்விக்கு முக்கிய காரணமாக விளங்கியவர் தென்னாப்பிரிக்கா பவுலர் மார்கோ ஜான்சன் தான்.
முதல் டெஸ்ட் போட்டியில் ஐந்து விக்கெட்டுகளையும், இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பேட்டிங்கில் 93 ரன்கள், பந்துவீச்சின் ஒரு இன்னிங்ஸில் 6 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தினார். ஜான்சனின் இந்த பந்துவீச்சு இந்தியாவை கதிகலங்க வைத்தது.

7 அடி உயரம் உள்ள இவருடைய பந்துவீச்சு இந்திய வீரர்களுக்கு கடும் சிக்கலை ஏற்படுத்தியது. குறிப்பாக சிவப்பு பந்து ஆரம்பத்தில் நன்றாக ஸ்விங் ஆகும்.அதுவும் இவர் உயரமான பவுலர் என்பதால் ஆடுகளத்தில் நல்ல பவுன்சை உருவாக்க முடியும். இதனால் டெஸ்ட் போட்டியில் தொடக்க வீரராக களமிறங்கிய ஜெய்ஸ்வால் சிரமப்பட்டார். இந்த நிலையில் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஜெய்ஸ்வாலுக்கு இரண்டாவது முறையாக தற்போது வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது.
ரோகித் சர்மாவுடன் ஜோடி சேர்ந்து ஜெய்ஸ்வால் தற்போது களமிறங்கினார். முதல் ஓவரை 7 அடி உயரம் கொண்ட மார்க்கோ ஜான்சன் பந்து வீச அதனை கொஞ்சம் கூட மதிக்காமல் ஜெயஸ்வால் பளார் என்று ஒரு பவுண்டரி அடித்தார். இதனால் மைதானத்தில் இருந்த ரசிகர்கள் கொண்டாடினர். டெஸ்ட் கிரிக்கெட்டில் பயத்தை ஏற்படுத்திய மார்க்கோ ஜான்சன், ஒருநாள் கிரிக்கெட்டில் முதல் பந்திலே அடிவாங்கியது ரசிகர்களை மகிழ்ச்சி அடைய செய்தது.
இதேபோன்று அடுத்த பந்தையும் மார்க்கோ ஜான்சன் கோபமாக வீச அது அவருடைய உயரத்திற்கு மீண்டும் நல்ல பவுன்சை ஆடுகளத்தில் ஏற்படுத்தியது. இதனால் அந்த பந்தை விக்கெட் கீப்பரும் பிடிக்க முடியாததால் அது பௌண்டரிக்கு சென்றது. இதனால் முதல் ஓவரில் இந்திய அணி ஒன்பது ரன்களை எடுத்து இருக்கின்றது.
இதேபோன்று மார்க்கோ ஜான்சன் தன்னுடைய இரண்டாவது ஓவர் வீசியபோது ஷார்ட் பாலை கொண்டு ஜெய்ஸ்வாலுக்கு பிரச்சனை ஏற்படுத்த முயன்றது. ஆனால் அதையும் அவர் பளார் என அறைந்து சிக்ஸர் அடித்தார். எனினும் பர்கர் வீசிய ஆட்டத்தின் 3.1 ஓவரில் ஜெய்ஸ்வால் மணிக்கு 143 கிலோ மீட்டர் வேகத்தில் வந்த பந்தை தடுக்க முற்பட்டபோது, அது விக்கெட் கீப்பரிடம் கேட்ச் ஆனது.
இதனால் ஜெய்ஸ்வால் 18 ரன்களில் ஆட்டம் இழந்தார்
இதை குறிப்பிட்டுள்ள ரசிகர்கள் வெள்ளை நிற கிரிக்கெட் பந்து போட்டி என்பது ஜெயஸ்வாலின் கோட்டை என்றும் பலமுறை காத்திருப்பதற்குப் பிறகு கிடைத்த வாய்ப்பை அவர் சரியாக பயன்படுத்த வேண்டும் என்று ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.