ஜோஹன்னஸ்பெர்க் : இந்திய டி20 அணியின் துவக்க வீரராக நிரந்தர இடம் பிடிப்பார் என கருதப்பட்ட யாஷஸ்வி ஜெய்ஸ்வால் அணியில் இருந்தே நீக்கப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
சுப்மன் கில் டி20 அணிக்கு திரும்பியதை அடுத்து அணியில் துவக்க வீரர் இடத்துக்கு கடும் போட்டி எழுந்துள்ளது. விவிஎஸ் லக்ஷ்மன் டி20 அணியின் தற்காலிக பயிற்சியாளராக இருந்த வரை ஜெய்ஸ்வால் அணியின் துவக்க வீரராக நீடித்தார். அப்போது சுப்மன் கில்லும் அணியில் இடம் பெறவில்லை.

தற்போது பயிற்சியாளராக ராகுல் டிராவிட் மற்றும் துவக்க வீரராக சுப்மன் கில் அணிக்கு திரும்பி இருக்கிறார்கள். அதனால், நிலையான ரன் குவிப்பை வழங்க முடியாத ஜெய்ஸ்வால் அணியில் இருந்து நீக்கப்பட வாய்ப்பு உள்ளதாக பிசிசிஐ வட்டாரத்தில் கூறப்படுகிறது.
இதற்கு ருதுராஜ் ஜெய்க்வாட்டும் ஒரு காரணம். டி20 அணியின் துவக்க வீரராக ருதுராஜ் சிறப்பான பங்களிப்பை அளித்துள்ளார். ஜெய்ஸ்வால் முதல் பந்தில் இருந்தே பவுண்டரி அடிக்க முயற்சி செய்வார் என்றால் ருதுராஜ் அதற்கு நேர் மாறாக துவக்கத்தில் நிதான ஆட்டம் ஆடி, பின்னர் அதிரடிக்கு மாறுவார். அதன் காரணமாக அவர் விக்கெட் இழக்காமல் ஆடி அதிக ரன் குவித்து வருகிறார்.
ஆனால், ஜெய்ஸ்வால் அணி நிர்வாகத்தின் திட்டப்படி முதல் பந்தில் இருந்தே அதிரடி ஆட்டம் ஆட முயல்கிறார். அதில் சில சமயம் அவர் ரன் குவிக்கும் முன்பே விக்கெட்டை இழக்கிறார். கடந்த ஆஸ்திரேலிய தொடரில் ஜெய்ஸ்வால் ஐந்து போட்டிகளில் ஆடி 21, 53, 6, 37, 21 ரன்கள் எடுத்து இருந்தார்.
இது மோசம் இல்லை என்றாலும், அதே ஆஸ்திரேலிய தொடரில் ருதுராஜ் கெய்க்வாட் ஒரு சதம், இரண்டு அரைசதம் அடித்து ஜெய்ஸ்வாலை தாண்டி, அந்த தொடரிலேயே அதிக ரன் குவித்த வீரராக இருந்தார். அதனால் ஜெய்ஸ்வால் - ருதுராஜ், இருவரில் யாரை அணியில் தேர்வு செய்வது என்ற விவாதம் வந்தால் எளிதாக ருதுராஜ் முன்னிலை பெறுவார். சுப்மன் கில் ஒருநாள் அணியில் இந்திய அளவில் நம்பர் 1 வீரராக இருக்கும் நிலையில், அவருக்கும் டி20 அணியில் இடம் அளித்தே ஆக வேண்டும் என்ற கட்டாயம் ஏற்பட்டு உள்ளது.