ஜொகன்னஸ்பெர்க்: தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான 3வது டி20 போட்டியில் இந்திய அணியின் இளம் தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 34 பந்துகளில் அரைசதம் அடித்து அசத்தியுள்ளார்.
இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 3வது டி20 போட்டி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி கேப்டன் மார்க்ரம் பந்துவீச்சை தேர்வு செய்தார். இந்திய அணியில் மீண்டும் ருதுராஜ் கெய்க்வாட் சேர்க்கப்படாமல், சுப்மன் கில் தான் தொடக்க வீரராக களமிறக்கப்பட்டார்.

இந்திய அணி தரப்பில் இடது கை, வலது கை பேட்ஸ்மேன்களுடன் களமிறங்குவது என்ற திட்டமே செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதற்கேற்ப ஜெய்ஸ்வால் - சுப்மன் கில் கூட்டணி தொடக்கம் கொடுத்தது. 2 ஓவர்களில் இருவரும் இணைந்து 29 ரன்கள் சேர்த்த நிலையில், 3வது ஓவரில் சுப்மன் கில் 6 ரன்களிலும், திலக் வர்மா டக் அவுட்டாகியும் வெளியேறினர்.
இதனால் இந்திய அணி 29 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதன்பின் வந்த கேப்டன் சூர்யகுமார் யாதவ் சில நிமிடங்கள் நிதான ஆட்டத்தையே வெளிப்படுத்தினார். ஆனால் மறுபக்கம் நின்றிருந்த யஷஸ்வி ஜெய்ஸ்வால் அதிரடியில் பொளந்து கட்டினார். இவரின் அதிரடி காரணமாக இந்திய அணி 6 ஓவர்கள் முடிவில் 62 ரன்களை சேர்த்தது.
இதன்பின் ஒவ்வொரு ஓவருக்கும் பவுண்டரியை விளாசிய யஷஸ்வி ஜெய்ஸ்வால், 34 பந்துகளில் அரைசதம் விளாசி மிரட்டினார். இதன்பின் அதிரடியை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்ற அவரின் ஆட்டத்தால், சூர்யகுமார் யாதவும் அடுத்த கட்டத்திற்கு நகர்ந்தார். இதன் மூலம் 32 பந்துகளில் அவர் அரைசதம் அடிக்க, இருவரும் பொளந்து கட்டினர்.
தொடர்ந்து 14வது ஓவரின் கடைசி பந்தில் சிக்ஸ் அடிக்க முயன்ற யஷஸ்வி ஜெய்ஸ்வால் 41 பந்துகளில் 3 சிக்ஸ், 6 பவுண்டரி உட்பட 60 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். 2வது டி20 போட்டியில் டக் அவுட்டாகி வெளியேறிய ஜெய்ஸ்வால், அடுத்த போட்டியிலேயே கம்பேக்கை கொடுத்துள்ளது ரசிகர்களிடையே பாராட்டுகளை பெற்று வருகிறது.