மும்பை: இந்திய அணியின் இளம் நட்சத்திரம் யஷஸ்வி ஜெய்ஸ்வால், எதிர்காலத்தில் கேப்டனாக இந்திய அணியை வழிநடத்த விரும்புவதாகத் தனது லட்சியத்தை வெளிப்படுத்தியுள்ளார். சுப்மன் கில்லை அனைத்து வித அணிகளுக்கும் ஒரே கேப்டனாக நியமிக்க பிசிசிஐ மற்றும் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் காய் நகர்த்தி வரும் நிலையில் ஜெய்ஸ்வால் இப்படி ஒரு ஆசையை வெளிப்படுத்தி இருக்கிறார்.
டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் கலக்கி வரும் ஜெய்ஸ்வால், டி20 அணியில் தனக்குத் தொடர்ந்து வாய்ப்பு மறுக்கப்படுவது குறித்தும் மனம் திறந்துள்ளார். சமீபத்தில் நடந்த ஒருநாள் தொடரின் கடைசிப் போட்டியில் சதம் அடித்து இந்திய அணியின் வெற்றிக்கு வித்திட்டவர் ஜெய்ஸ்வால். மூன்று வடிவங்களிலும் சதம் அடித்த 6 இந்தியர்களில் ஒருவரான இவர், தற்போது டி20 அணியிலிருந்து ஓரங்கட்டப்பட்டுள்ளார்.

'ஆஜ் தக்' தொலைக்காட்சி நடத்திய நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஜெய்ஸ்வாலிடம், வருங்காலத்தில் இந்திய அணியின் கேப்டனாகும் ஆசை உள்ளதா என்று கேட்கப்பட்டது. அதற்குப் பதிலளித்த அவர், "நிச்சயமாக. நான் கேப்டனாக ஆக முடியும் என்று எப்போதும் நினைக்கிறேன். ஏன் முடியாது? நான் தொடர்ந்து முயற்சி செய்வேன். எனக்கான நேரம் வரும்போது அது நிச்சயம் நடக்கும். நான் எப்போதும் சிறப்பாகச் செயல்படவும், அனுபவத்தைப் பெற்றுக்கொள்ளவுமே நினைக்கிறேன். ஆனால் இன்றைய நாளை நான் ரசிக்க விரும்புகிறேன்" என்று நம்பிக்கையுடன் கூறினார் ஜெய்ஸ்வால்.
இதுவரை உள்ளூர் போட்டிகளில் கூட கேப்டனாகச் செயல்படாத ஜெய்ஸ்வாலுக்கு, 2026 ஐபிஎல் தொடரில் கேப்டன் பொறுப்பு வழங்கப்படலாம் என ஒரு பேச்சு உள்ளது. ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் சஞ்சு சாம்சன் சிஎஸ்கே அணிக்கு டிரேட் செய்யப்பட்டுள்ளதால், கேப்டன் இடம் காலியாக உள்ளது. அந்த இடத்திற்கு ஜெய்ஸ்வால், ரவீந்திர ஜடேஜா அல்லது ரியான் பராக் ஆகியோரில் ஒருவரை நியமிக்க நிர்வாகம் ஆலோசித்து வருகிறது. அதில் ஜெய்ஸ்வாலுக்கு அதிக வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
2024 டி20 உலகக்கோப்பை வென்ற அணியில் இடம்பெற்றிருந்த ஜெய்ஸ்வால், ஜூலை 2024-க்குப் பிறகு இந்திய டி20 அணியில் விளையாடவில்லை. தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தற்போதைய டி20 தொடரிலும் அவர் இல்லை. துவக்க வீரர்களான அபிஷேக் சர்மா அதிரடி காட்டுவதாலும், சுப்மன் கில் துணை கேப்டனாக இருப்பதாலும் ஜெய்ஸ்வாலுக்கு இடம் கிடைக்கவில்லை.
இதுகுறித்து பேசிய அவர், "டி20 உலகக்கோப்பையில் விளையாட வேண்டும் என்பது எனது கனவு. ஆனால் தேர்வுக் குழுவின் முடிவை நான் மதிக்கிறேன். விசாகப்பட்டினத்தில் சதம் அடித்தது போல, கிடைக்கும் வாய்ப்புகளில் என்னை நிரூபிப்பேன். எனக்கான நேரத்திற்காகக் காத்திருக்கிறேன்" என்று முதிர்ச்சியுடன் பதிலளித்தார். 2026 டி20 உலகக்கோப்பை நெருங்கும் வேளையில், ஜெய்ஸ்வாலின் இந்தத் தன்னம்பிக்கை அவருக்கு மீண்டும் டி20 அணியில் கதவுகளைத் திறக்குமா?