கொழும்பு: இலங்கை அணிக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் இந்திய அணி ரோஹித் சர்மா தலைமையில் களமிறங்கியது. அப்போது அனைத்து இந்திய வீரர்களும் கையில் கருப்பு பட்டை அணிந்து இருந்தனர். எதற்காக இந்திய வீரர்கள் கருப்பு பட்டை அணிந்து உள்ளனர்? என ரசிகர்கள் பலரும் சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
முன்னாள் வீரரும், முன்னாள் இந்திய அணி பயிற்சியாளருமாக அன்ஷுமன் கெய்க்வாட் கடந்த புதன் கிழமை அன்று மறைந்தார். அவரது வயது 71. அவர் புற்று நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். அதற்காக கடந்த சில நாட்களாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு பிசிசிஐ ஒரு கோடி ரூபாய் மருத்துவ உதவிக்காக வழங்கி இருந்தது. இந்த நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

அவரது நினைவாகவே இந்திய அணி வீரர்கள் கையில் கருப்பு பட்டை அணிந்து விளையாடினர். அவர் இந்திய அணிக்காக 15 ஒரு நாள் போட்டிகளிலும், 40 டெஸ்ட் போட்டிகளிலும் விளையாடி உள்ளார். அவர் 1975 முதல் 1987 வரை இந்திய அணிக்காக விளையாடினார். டெஸ்ட் போட்டிகளில் 1985 ரன்கள் குவித்துள்ளார். இரண்டு சதம் மற்றும் பத்து அரை சதம் அடித்துள்ளார். ஒருநாள் போட்டிகளில் 269 ரன்கள் சேர்த்துள்ளார். ஒரு அரை சதம் மட்டும் அடித்துள்ளார்.
அவர் இந்திய அணியின் தேர்வு குழு உறுப்பினராகவும், இந்திய அணியின் பயிற்சியாளராகவும் செயல்பட்டு இருக்கிறார். அவரது மறைவுக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி, பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா ஆகியோர் இரங்கல் தெரிவித்தனர். இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா, அவரைக் குறித்து சில நினைவுகளை பகிர்ந்து கொண்டார். சில மாதங்கள் முன்பு பிசிசிஐ விருது வழங்கும் விழாவில் அவருடன் சில நிமிடங்கள் பேசிக் கொண்டிருந்ததாகவும், அதற்கு முன்பு தான் ரஞ்சி ட்ராபியில் விளையாடிய போது அவரிடம் பேசியதாகவும் ரோஹித் சர்மா குறிப்பிட்டார்.