கொழும்பு: இலங்கை அணிக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் சிவம் துபேவுக்கு வாய்ப்பு கிடைக்குமா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. அவர் இதற்கு முன்பு இந்திய அணிக்காக ஒரே ஒரு சர்வதேச ஒரு நாள் போட்டியில் மட்டும் விளையாடி இருக்கிறார்.
2019 ஆம் ஆண்டு, டிசம்பர் 15 அன்று அவர் சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் அறிமுகமானார். அதுவே அவரது கடைசி ஒரு நாள் போட்டியாகவும் உள்ளது. தற்போது ஐந்து ஆண்டுகள் கழித்து இலங்கை அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரில் அவர் தேர்வாகி இருக்கிறார். இன்று நடைபெறும் முதல் ஒருநாள் போட்டியில் கேப்டன் ரோஹித் சர்மா அவரை களமிறக்க முடிவு செய்தால், சுமார் 1692 நாட்களுக்கு பின் சிவம் துபே மீண்டும் சர்வதேச ஒரு நாள் போட்டியில் களம் இறங்கும் வாய்ப்பை பெறுவார்.

தற்போது சிவம் துபே டி20 வீரராகவே அறியப்படுகிறார். கடந்த இரண்டு ஆண்டுகளாக ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக அவர் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாக சிறப்பாக செயல்பட்டு வருகிறார். அதன் அடிப்படையில் அவர் இந்திய டி20 அணியில் இடம் பெற்றார். 2024 டி20 உலகக் கோப்பையிலும் அவர் இந்திய அணி ஆடிய அனைத்து போட்டிகளிலும் களம் இறங்கினார்.
டி20 உலகக்கோப்பையின் துவக்கத்தில் சிவம் துபேவின் பேட்டிங் சரியாக அமையாத நிலையில், இறுதிப்போட்டியில் அவர் அபாரமாக ஆடினார். இந்திய அணியின் வெற்றிக்கு அவரும் ஒரு காரணமாக அமைந்தார். இதை அடுத்து அவர் இந்திய டி20 அணியில் நிலையான இடத்தை பெற்று இருக்கிறார். ஆனால், அவரே எதிர்பாராதவிதமாக ஒரு நாள் அணியிலும் அவருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டு இருக்கிறது.
ஹர்திக் பாண்டியா இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் பங்கேற்காத நிலையில், அவருக்கு மாற்று வீரராக பகுதி நேர பந்துவீச்சாளராக வேகப் பந்து வீசக் கூடிய சிவம் துபே தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார். ஆனால், அவருக்கு போட்டியில் களம் இறங்கும் வாய்ப்பு அளிக்கப்படுமா? என்பது கேள்விக்குறியாக உள்ளது.
தற்போது இந்திய ஒரு நாள் அணியில் பேட்டிங் வரிசையிலும் ஆல் ரவுண்டர்களுக்கு இடையிலும் கடும் போட்டி நிலவி வருகிறது. அந்தப் போட்டிக்கு இடையே மாற்று வீரரான சிவம் துபேவுக்கு வாய்ப்பு கிடைக்குமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. கேப்டன் ரோஹித் சர்மா பகுதி நேர வேகப்பந்து வீச்சாளர் தேவை என நினைத்தால் நிச்சயம் சிவம் துபேவுக்கு இந்த போட்டியில் வாய்ப்பு கிடைக்கும்.