பல்லேகேலே: இலங்கை சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி இன்று முதல் இலங்கை அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்க உள்ளது. இந்த இரு அணிகளும் மோத உள்ள முதல் டி20 போட்டி பல்லேகேலே மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த முதல் டி20 போட்டி நடக்கவுள்ள பல்லேகேலே மைதானத்தின் பிட்ச் குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளன.
பல்லேகேலேவில் பொதுவாகவே பேட்டிங் பிட்ச் தான் இருக்கும் என கூறப்படுகிறது. சில சமயம் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமான சூழ்நிலை நிலவும். குறிப்பாக இரவு நேரங்களில் மின் விளக்குகளின் கீழ் அந்த பிட்ச் சில ஓவர்களுக்கு ஸ்விங் நன்றாக இருக்கும் என பிட்ச்சை பராமரிக்கும் ஊழியர்கள் கூறி உள்ளனர்.

எனவே, போட்டியின் முதல் இரண்டு - மூன்று ஓவர்களுக்கு பந்து நன்றாக ஸ்விங் ஆக வாய்ப்பு உள்ளது. எனவே முதலில் பேட்டிங் செய்யும் அணி முதல் மூன்று ஓவர்களுக்கு கவனமாக ஆட வேண்டும். அந்த வகையில் இந்த போட்டியில் டாஸ் வெல்லும் அணி முதலில் பந்து வீசவே வாய்ப்பு அதிகம். எனினும் இந்த பிட்ச் பெரும்பாலும் பேட்ஸ்மன்களுக்கு சாதகமாக இருக்கும். முதலில் பேட்டிங் செய்யும் அணி முதல் மூன்று ஓவர்களை சமாளித்து ஆடிவிட்டால் அதன் பின் எளிதாக ரன் குவிக்கலாம்.
அந்த வகையில் இந்திய அணியின் துவக்க வீரர்கள் சுப்மன் கில் மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் என்ன செய்யப் போகிறார்கள்? என்ற எதிர்பார்ப்பும் உள்ளது. அவர்கள் விக்கெட் இழக்காமல் ஆடிவிட்டால் இந்திய அணி எளிதாக ரன் குவிக்கலாம். 180 முதல் 200 ரன்கள் வரை குவிப்பதே இந்த மைதானத்தில் சிறந்த ஸ்கோராக இருக்கும்.
இலங்கை அணியை பொறுத்தவரை புதிய கேப்டனான சரித் அசலங்கா-வின் கீழ் அந்த அணி விளையாட உள்ளது. கடந்த டி20 உலக கோப்பையில் இலங்கை அணி மிகவும் மோசமாக செயல்பட்டு இருந்தது. அதனால் இந்த போட்டியில் அந்த அணி சராசரியாகவே செயல்படும் என்ற எண்ணம் உள்ளது. அதே சமயம் இந்திய அணி தொடரின் முதல் போட்டியிலேயே எதிரணியை குறைத்து மதிப்பிட்டு சொதப்பி விடக் கூடாது. கடந்த மாதம் நடந்த ஜிம்பாப்வே டி20 தொடரில் முதல் போட்டியில் இந்திய அணி கவனமாக விளையாடாததால் தோல்வி அடைந்தது குறிப்பிடத்தக்கது.