பல்லேகேலே: இலங்கை அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி அபாரமாக ஆடி 43 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் ஒரு கட்டத்தில் இலங்கை அணி வெற்றி பெறுவது போல சேஸிங் செய்து வந்தது. ஆனால், கடைசி ஆறு ஓவர்களில் அபாரமாக பந்து வீசிய இந்திய அணியின் பந்துவீச்சாளர்கள் போட்டியை தலைகீழாக மாற்றினார்கள்.
குறிப்பாக 15 வது ஓவருக்கு பின் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் மற்றும் கேப்டன் சூர்யகுமார் இணைந்து செய்த ஒரு அதிரடி திட்டம் போட்டியில் திருப்புமுனையாக அமைந்தது.

இந்தப் போட்டியில் இலங்கை அணி டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்திய அணியின் துவக்க வீரர்கள் சுப்மன் கில் 16 பந்துகளில் 34 ரன்களும், ஜெய்ஸ்வால் 21 பந்துகளில் 40 ரன்களும் சேர்த்தனர். கேப்டன் சூர்யகுமார் யாதவ் 26 பந்துகளில் 58 ரன்களும், ரிஷப் பண்ட் 33 பந்துகளில் 49 ரன்களும் சேர்த்தனர். இந்திய அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 213 ரன்கள் சேர்த்தது.
214 ரன்கள் என்ற பெரிய இலக்கை நோக்கி சேஸிங் செய்யத் தொடங்கிய இலங்கை அணி, துவக்க வீரர்கள் குசால் மென்டிஸ் மற்றும் பதும் நிசங்கா அபாரமாக ஆடினர். இருவரும் முதல் விக்கெட்டுக்கு 84 ரன்கள் சேர்த்தனர். குசால் மென்டிஸ் 27 பந்துகளில் 45 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த பெரேரா அதிரடியாக ஆடினார்.
இலங்கை அணி ஒரு ஓவருக்கு 10 ரன்கள் என்ற அளவில் ரன் குவித்து வந்ததால் அந்த அணி வெற்றி பெறும் என்ற எதிர்பார்ப்பு எகிறியது. ஆனால் 15 வது ஓவரை வீசிய அக்சர் பட்டேல் போட்டியை தலைகீழாக மாற்றினார். அந்த ஓவரிலன் முதல் பந்தில் பதும் நிசங்கா 48 பந்துகளில் 79 ரன்கள் சேர்த்த நிலையில் ஆட்டம் இழந்தார். அதே ஓவரின் கடைசி பந்தில் குசால் பெரேரா 20 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார்.
அதற்கு அடுத்த ஓவரை வீசிய ரவி பிஷ்னோய் அசல்ங்கா விக்கெட்டை வீழ்த்தினார். அதற்கு அடுத்து கடைசி நான்கு ஓவர்களை வேகப் பந்துவீச்சாளர்கள் அர்ஷ்தீப் சிங் மற்றும் முகமது சிராஜ் வீசுவார்கள் என்று அனைவரும் எதிர்பார்த்த நிலையில், பயிற்சியாளர் கம்பீர் மற்றும் கேப்டன் சூர்யகுமார் யாதவ், ரியான் பராக்கை பந்து வீச வைத்தனர்.
இந்த போட்டியில், அதற்கு முன் ரியான் பராக் பந்து வீசி இருக்கவில்லை. ஒருவேளை அவர் அதிக ரன்களை விட்டுக் கொடுத்தால் போட்டி கையை மீறி போகலாம் என்ற சந்தேகமும் இருந்தது. ஆனால், ரியான் பராக் நிச்சயமாக இலங்கை அணியை ரன் குவிக்க விடாமல் தடுத்து நிறுத்துவார் என நம்பிய கேப்டன் சூர்யகுமார் அவருக்கு வாய்ப்பு அளித்தார்.
எதிர்பார்த்தது போலவே அந்த ஓவரில் ஒரு ரன் அவுட் ஆனதுடன், பராக் ஒரு விக்கெட் வீழ்த்தினார். அந்த ஓவரில் ஐந்து ரன்கள் மட்டுமே கொடுக்கப்பட்டது. அத்துடன் போட்டி முழுமையாக இந்தியா வசம் வந்தது. 17 ஓவர்களின் முடிவில் இலங்கை அணி 18 பந்துகளில் 51 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற நிலைக்கு சென்றது. மேலும், 6 விக்கெட்கள் வீழ்ந்ததால் அந்த அணி நம்பிக்கை இழந்தது.
அதன் பின் 19.2 ஓவர்களில் 170 ரன்கள் எடுத்து இலங்கை அணி ஆல் அவுட் ஆனது. 1.2 ஓவர்களில் 5 ரன்கள் மட்டும் விட்டுக் கொடுத்து மூன்று விக்கெட்களை வீழ்த்தி இருந்தார் ரியான் பராக். அக்சர் பட்டேல் 2, அர்ஷ்தீப் சிங் 2, முகமது சிராஜ் 1, ரவி விஷ்ணு 1 விக்கெட் வீழ்த்தி இருந்தனர். இந்தியா 43 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.