IND vs SL: விக்கெட் வேட்டையில் இந்திய பவுலர்கள்.. சுழலில் சிக்கி சின்னாப்பின்னமான இலங்கை டாப் ஆர்டர்
காலே: இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டத்தில் இந்திய கிரிக்கெட் அணி தனது முழு ஆதிக்கத்தை நிலைநிறுத்தியுள்ளது. இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 462 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனதைத் தொடர்ந்து, தனது முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய இலங்கை அணி இந்திய அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் திணறி வருகிறது.
இந்திய அணியின் பேட்டிங்கில் தேவ்தத் படிக்கல் அபாரமாக விளையாடி 167 ரன்கள் குவித்தார். இதன் மூலம் இந்திய அணி 462 ரன்கள் என்ற வலுவான ஸ்கோரை எட்டியது. அதனைத் தொடர்ந்து களமிறங்கிய இலங்கை அணிக்கு, இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் தனது ஓவரின் இரண்டாவது பந்திலேயே விக்கெட் வீழ்த்தி அதிர்ச்சி தொடக்கம் தந்தார். இதனால் இலங்கை அணி ஆரம்பத்திலேயே சரிவைச் சந்திக்கத் தொடங்கியது.

மைதானத்தின் தன்மை சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக இருந்ததை இந்திய ஸ்பின்னர்கள் சரியாகப் பயன்படுத்திக் கொண்டனர். குறிப்பாக, மானவ் சுதார் தனது சுழலால் இலங்கை பேட்ஸ்மேன்களுக்கு கடும் நெருக்கடி கொடுத்து 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். ரவீந்திர ஜடேஜா நேர்த்தியாக பந்துவீசி தனஞ்சய டி சில்வாவின் முக்கிய விக்கெட்டை வீழ்த்தினார். குல்தீப் யாதவ் தன் பங்கிற்கு ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினார். இதனால் இலங்கை அணி 59 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தவித்தது.
மூன்றாம் நாள் ஆட்டத்தின் மதிய உணவு இடைவேளையின் போது இலங்கை அணி 5 விக்கெட் இழப்பிற்கு 99 ரன்கள் எடுத்திருந்தது. பின்னர் தொடர்ந்து இரண்டாவது பகுதி ஆட்டம் தொடங்கியது. சோனல் தினுஷா மற்றும் நிரோஷன் டிக்வெல்லா ஆகிய ஜோடி விக்கெட் விழாமல் தடுத்து நிதானமாக விளையாடி வருகிறது. இலங்கை அணி 5 விக்கெட் இழப்பிற்கு 114 ரன்கள் எடுத்துள்ள நிலையில், ஃபாலோ-ஆனைத் தவிர்க்க இன்னும் 150 ரன்கள் தேவைப்படுவதால் இலங்கை அணி கடும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது.
தொடர்ந்து மழை குறுக்கீடும் என்பதால், இலங்கை அணிக்கு ஃபாலோ ஆன் கொடுக்க இந்தியா முயற்சித்து வருகிறது. இந்திய பவுலர்களில் பிரசித் கிருஷ்ணா மட்டும் இன்னும் விக்கெட் எடுக்கவில்லை. வானிலை அறிக்கையின் படி, இன்று மாலை மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications

