IND vs SL: அடுத்தடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்திய இலங்கை.. 400 ரன்களை கடந்த இந்தியா
காலே: இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் மழை காரணமாக பாதிக்கப்பட்டது. ஆட்டம் தாமதமாக தொடங்கிய நிலையில், இலங்கை அணியின் அறிமுக சுழற்பந்து வீச்சாளர் கேஷர நுவன்தா, இந்திய அணியின் முன்னணி பேட்டர்களான ரிஷப் பண்ட் மற்றும் கேஎல் ராகுல் ஆகியோரின் விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார்.
மழை காரணமாக சுமார் ஐந்து மணி நேர தாமதத்திற்குப் பிறகு, ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2:35 மணிக்கு ஆட்டம் தொடங்கியது. இந்திய அணியின் முதல் இன்னிங்ஸின் 81-வது ஓவரின் நான்காவது பந்தில், தன்னுடை அறிமுக டெஸ்ட் விக்கெட்டை கேஷர நுவன்தா கைப்பற்றினார்.

ஆஃப்-ஸ்டம்பிற்கு வெளியே வீசப்பட்ட பந்தை ரிஷப் பண்ட் இறங்கி வந்து தூக்கி அடிக்க முயன்றார். ஆனால் பந்து பேட்டில் சரியாக படாததால், மிட்-ஆஃப் திசையில் ஓடிவந்து சோனல் தினுஷா ஒரு சிறந்த ஸ்லைடிங் கேட்சை பிடித்தார். இதன் மூலம் பண்ட் 62 பந்துகளில் 4 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்சருடன் 39 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
முன்னதாக, முதல் நாள் ஆட்டத்தில் 77 ரன்கள் எடுத்திருந்த போது தசைப்பிடிப்பு காரணமாக தற்காலிகமாக ஓய்வெடுத்த கேஎல் ராகுல், இரண்டாம் நாளில் மீண்டும் களம் இறங்கினார். ஆனால் அவரால் கூடுதலாக 5 ரன்கள் மட்டுமே சேர்க்க முடிந்தது. 85-வது ஓவரின் முதல் பந்தில், நுவன்தா வீசிய லென்த் பந்து கூடுதல் பவுன்ஸுடன் உள்ளே திரும்பியது. அதை எதிர்கொள்ள முயன்ற ராகுல், ஷார்ட் லெக் திசையில் நின்றிருந்த நிஷான் பெர்னாண்டோவிடம் எளிதான கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
ராகுல் 175 பந்துகளில் 10 பவுண்டரிகள், ஒரு சிக்சருடன் 82 ரன்கள் எடுத்தார். ராகுலின் விக்கெட்டை இழந்த போது இந்திய அணி 84.1 ஓவர்களில் 319 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்திருந்தது. அதன் பிறகு துருவ் ஜூரல் , ஜடேஜா பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி, ஸ்கோரை உயர்த்த உதவினர். ஆனால் ஜடேஜா 13 ரன்களில் வெளியேற, இந்திய அணி 106 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 413 ரன்கள் எடுத்துள்ளது.


Click it and Unblock the Notifications
