மும்பை : இந்திய கிரிக்கெட் அணி அடுத்த சில மாதங்களில் பல்வேறு டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகின்றது. இலங்கைக்கு எதிராக மூன்று டி20, 3 ஒரு நாள் போட்டிகள், வங்கதேசத்துக்கு எதிராக இரண்டு டெஸ்ட், மூன்று டி20 போட்டிகள், தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக நான்கு டி20 போட்டிகள் போன்ற தொடரில் இந்திய அணி விளையாட இருக்கின்றது.
இதை தவிர்த்து நியூசிலாந்துக்கு எதிராக மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் அக்டோபர் மாதம் இந்தியா விளையாடுகிறது. இந்த போட்டிக்கு எந்தெந்த வீரர்கள் இடம்பெறப் போகிறார்கள் என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. மேலும் பயிற்சியாளர் கம்பீர் யாருக்கு வாய்ப்பு தர போகிறார் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

இந்த நிலையில் 25 வயது வீரரான இசான் கிஷன் அடுத்த இந்திய அணியின் சிறந்த இடதுகை பேட்ஸ்மேன் என்ற பெயரை பெறுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தொடர்ந்து தாம் இந்திய அணியில் இருப்பதால் மனசோர்வு ஏற்பட்டதாக கூறி அணியில் இருந்து விலகினார். ஆனால் ஓய்வில் இருக்காமல் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று இசான் கிஷன், பிசிசிஐயின் கோபத்திற்கு ஆளாகினார்.
அது மட்டும் அல்லாமல் ரஞ்சி போட்டிகளில் விளையாடுங்கள் என பிசிசிஐ கெடு விதித்தும் இசான் கிஷன் அது குறித்து காதில் வாங்கவில்லை. இந்த நிலையில் இஷான் கிஷன் அதன் பிறகு இந்திய அணியில் சேர்க்கப்படவில்லை. டி20 உலக கோப்பை தொடரிலும் இசான் கிஷன் பெயர் பரிசிலிக்கப்படவில்லை. மேலும் பிசிசிஐ வீரர்களுக்கான ஒப்பந்தத்தில் இருந்தும் அதிரடியாக இசான் கிஷன் நீக்கப்பட்டிருக்கிறார்.
இதனால் தான் தவறு செய்து விட்டோம் என்பதை உணர்ந்த இசான் கிஷன் எப்படியாவது இந்திய அணியில் சேர வேண்டும் என்று முயற்சி செய்து வருகிறார். ஜிம்பாப்வே தொடரில் இளம் வீரர்கள் இடம்பெற்றும் அதில் இசான் கிஷன் சேர்க்கப்படவில்லை. இந்த சூழலில் இலங்கைக்கு எதிரான டி20 ஒருநாள் போட்டிகளில் எப்படியாவது இடம்பெற வேண்டும் என்று கிஷன் போராடி வருகிறார்.
இதற்கான சிறப்பு பயிற்சிகள் அவர் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் தான் இன்னும் இருக்கிறேன் என்னை மறந்து விடாதீர்கள் என்பது போல் சமூக வலைத்தளத்தில் தான் அதிரடியாக விளையாடி பயிற்சி செய்யும் வீடியோவை இசான் கிஷன் பதிவிட்டு இருக்கிறார். எனினும் இசான் கிஷன் கம்பீரின் அணியில் இருப்பாரா இல்லை இந்த ஆண்டு முழுவதும் ஓரங்கட்டப்படுவாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.