கொழும்பு: இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்தியா 32 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்ததை அடுத்து 18 ஆண்டுகளுக்கு பின்பு மோசமான சாதனையை செய்து இருக்கிறது. மூன்று போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இலங்கை அணி 1 - 0 என முன்னிலையில் உள்ளது.
முதல் ஒருநாள் போட்டியில் இரண்டு அணிகளும் சரிசமமாக 230 ரன்கள் எடுத்ததால் போட்டி டை ஆனது. இரண்டாவது போட்டியில் இந்தியா எப்படியும் வெற்றி பெறும் என பலரும் எதிர்பார்த்த நிலையில் இரண்டாவது போட்டியில் இந்தியா 32 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இலங்கை அணி இந்த வெற்றியின் மூலம் 1108 நாட்களுக்குப் பின் இந்திய அணியை ஒருநாள் போட்டிகளில் வீழ்த்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.

கடைசியாக ஜூலை 2021ல் இந்திய அணியை ஒருநாள் போட்டிகளில் வீழ்த்தி இருந்தது இலங்கை அணி. தற்போது இந்த தொடரை இந்தியா வெல்ல முடியாத நிலை உள்ளது. முதல் போட்டி டையானது; இரண்டாவது போட்டியில் இலங்கை வென்று இருக்கிறது; இந்த நிலையில் மூன்றாவது போட்டியில் இந்தியா வென்றால் இந்த தொடரை 1 - 1 என சமன் மட்டுமே செய்ய முடியும். ஒருவேளை இலங்கை அணி மூன்றாவது போட்டியில் வெற்றி பெற்றால் தொடரை 2 - 0 என கைப்பற்றும்.
எனவே, இந்தியா இந்த தொடரை கைப்பற்ற வாய்ப்பு இல்லை. இதை அடுத்து 18 ஆண்டுகள் கழித்து இலங்கை அணிக்கு எதிரான தொடரை இந்திய அணி கைப்பற்ற முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. 2006 ஆம் ஆண்டு நடைபெற்ற ஒரு நாள் தொடரில் மூன்று போட்டிகளும் மழையால் கைவிடப்பட்டன. அதனால், அந்த தொடர் 0 - 0 என்ற அளவில் முடிவுக்கு வந்தது. அந்தத் தொடர் சமன் செய்யப்பட்டது.
அதேபோன்ற சூழ்நிலை இப்போதும் ஏற்பட்டு இருக்கிறது. அதற்கும் கூட இந்திய அணி மூன்றாவது போட்டியில் வெற்றி பெற வேண்டும். அப்போதுதான் தொடரை சமன் செய்ய முடியும். ஒரு வேளை இந்திய அணி மூன்றாவது போட்டியில் தோல்வியடைந்தால் 27 ஆண்டுகளுக்குப் பின்பு இலங்கை அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரில் தோல்வி அடைந்த மோசமான சாதனையை செய்யும்.
கடைசியாக 1997 ஆம் ஆண்டு இலங்கை அணி இந்திய அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரை கைப்பற்றி இருந்தது. இரண்டாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்து 240 ரன்கள் எடுத்தது. அடுத்து பேட்டிங் செய்த இந்திய அணி 208 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. இந்திய அணியில் கேப்டன் ரோஹித் சர்மா அபாரமாக ஆடினார். அவர் 44 பந்துகளில் 64 ரன்கள் சேர்த்தார். அவருக்கு அடுத்து அக்சர் பட்டேல் 44 பந்துகளில் 44 ரன்கள் சேர்த்தார். சுப்மன் கில் 35 ரன்கள் எடுத்திருந்தார். மற்ற பேட்ஸ்மேன்கள் அனைவரும் சொதப்பினர். இலங்கையின் ஜெப்ரி வாண்டர்சே 6 விக்கெட்கள் வீழ்த்தி இந்திய அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக இருந்தார்.