கொழும்பு: இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டி கொழும்பு பிரேமதேசா மைதானத்தில் நடைபெற உள்ளது. முதல் ஒருநாள் போட்டியும் இதே மைதானத்தில் தான் நடைபெற்றது. அந்தப் போட்டி டை-யில் முடிந்து இருந்தது. இரு அணிகளும் தலா 230 ரன்கள் மட்டுமே எடுத்து இருந்தன.
இந்த நிலையில் இரண்டாவது போட்டியில் பிட்ச் எப்படி இருக்கும்? என்பது குறித்த அறிக்கை வெளியாகி உள்ளது. முதல் போட்டி போன்றே இரண்டாவது போட்டியின் போதும் பிட்ச் சற்று மந்தமாகவே இருக்கும் என கூறப்படுகிறது. முதல் 20 ஓவர்கள் வரை பிட்ச் பேட்ஸ்மேனுக்கு சாதகமாக இருக்கும்.

அதற்கு முக்கிய காரணம், பந்து புதியதாக இருப்பது தான். 20 ஓவர்களுக்கு பின் பந்து பழையதானவுடன் சுழற் பந்துவீச்சுக்கு அதிகம் ஒத்துழைக்கும். எனவே, முதல் போட்டி போல இரண்டாவது போட்டியில் சுழற் பந்துவீச்சாளர்களே ஆதிக்கம் செலுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் இந்திய அணி இந்த போட்டியிலும் மூன்று சுழற் பந்துவீச்சாளர்களை களம் இறக்கும் என எதிர்பார்க்கலாம். அக்சர் பட்டேல், குல்தீப் யாதவ் மற்றும் வாஷிங்டன் சுந்தர் என மூன்று சுழற் பந்துவீச்சாளர்கள் இந்திய அணியில் இடம் பெறுவார்கள். இவர்கள் மூவரும் வரிசையாக விக்கெட்களை வீழ்த்தினால் மட்டுமே இந்த போட்டியில் இந்திய அணியால் ஆதிக்கம் செலுத்த முடியும். மேலும், இந்த பிட்ச்சில் அதிக ரன்கள் குவிக்க முடியாது எனவும் கூறப்படுகிறது. முதல் போட்டி போன்றே 230 முதல் 250 ரன்கள் குவித்தாலே நல்ல ஸ்கோராக கருதலாம்.
முதல் போட்டி டை-யில் முடிவடைந்து இருக்கும் நிலையில் இரண்டாவது போட்டியில் இந்தியா வெற்றி பெறவில்லை என்றால் அதிகபட்சம் தொடரை சமன் செய்ய மட்டுமே முடியும். இரண்டாவது போட்டியின் போது மழை பெய்யக்கூடும் எனவும் கூறப்படுகிறது. எனினும், போட்டியை தாமதப்படுத்தும் அளவிற்கு மழை இருக்காது எனவும் கணிக்கப்பட்டு இருக்கிறது.