பல்லேகேலே: இந்தியா இலங்கை அணிகள் மோதிய இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணி எளிதாக வெற்றி பெற்றதற்கு காரணம் என்ன என்பது குறித்து இலங்கை அணியின் கேப்டன் சரித் அசலங்கா அதிரடியாக பேசி இருக்கிறார். மழை இந்தப் போட்டியில் இந்திய அணிக்கு உதவியதாக குறிப்பிட்டார்.
இந்த போட்டியில் இந்திய அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்து 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 161 ரன்கள் எடுத்தது. அடுத்து இந்திய அணி பேட்டிங் செய்த போது மழை குறுக்கிட்டது. அதனால் போட்டி சிறிது நேரம் தாமதமானது.

அதன் பின் டி எல் எஸ் முறைப்படி வெற்றி இலக்கு 8 ஓவர்களில் 74 ரன்கள் என்பதாக மாற்றி அமைக்கப்பட்டது. அப்போது ஜெய்ஸ்வால், சூர்யகுமார் யாதவ் மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகியோர் தங்களின் அதிரடி ஆட்டத்தால் இந்திய அணியை 6.3 ஓவர்களில் வெற்றி பெற வைத்தனர்.
இந்தியா எளிதாக ரன் குவிக்க காரணம் மழையால் இந்தப் போட்டி நடந்த மைதானத்தின் அவுட் ஃபீல்டு ஈரமாக இருந்தது தான் என இலங்கை அணி கேப்டன் சரித் அசலங்கா கூறி இருக்கிறார். மேலும், தாங்கள் சரியாக பேட்டிங் செய்யவில்லை எனவும் கூறினார் சரித் அசலங்கா.
இது பற்றி அவர் பேசுகையில், "நாங்கள் கடைசி ஓவர்களில் பேட்டிங் செய்தது குறித்து எனக்கு ஏமாற்றமாக உள்ளது. எங்களுடைய மிடில் ஆர்டர் மற்றும் லோயர் மிடில் ஆர்டர் மிக மோசமாக இருந்தது. என்னையும் சேர்த்து தான் சொல்கிறேன். நாங்கள் பேட்டிங்கில் நிறைய முன்னேற்றத்தை செய்ய வேண்டும். இந்த பிட்ச்சில் பந்து பழையதானபின் பேட்டிங் செய்ய கடினமாக இருந்தது. ஆனால், நாங்கள் அதை எளிதாக பழகி இருக்க வேண்டும். நாங்கள் 15 முதல் 18 ரன்கள் வரை குறைவாகவே எடுத்தோம். மேலும், வானிலை மாற்றம் இந்த போட்டியில் முக்கிய வேலையை செய்தது. அதை எங்களால் கட்டுப்படுத்த முடியவில்லை. எட்டு ஓவர் போட்டியில் இது போன்ற ஈரமான ஆடுகளத்தில் மிக எளிதாக ரன் குவிக்கலாம்." என இந்திய அணியின் எளிதான வெற்றிக்கு காரணம் மழையால் அவுட் ஃபீல்டு ஈரமாக இருந்தது தான் என சுட்டிக்காட்டி இருக்கிறார் அசலங்கா.