பல்லேகேலே: இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணியின் துணை கேப்டன் சுப்மன் கில் அதிரடியாக நீக்கப்பட்டு இருக்கிறார். அவருக்கு பதிலாக சஞ்சு சாம்சன் பிளேயிங் லெவனில் இடம் பெற்று இருக்கிறார். சஞ்சு சாம்சனுக்கு இந்த தொடரில் விளையாட வாய்ப்பு கிடைக்காது என கூறப்பட்டு வந்து நிலையில், யாரும் எதிர் பார்க்காத திருப்பமாக இது அமைந்து இருக்கிறது. என்ன நடந்தது?
இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோதும் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் தற்போது இலங்கையில் நடைபெற்று வருகிறது. முதல் போட்டியில் இந்திய அணி 43 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அந்த போட்டியில் சஞ்சு சாம்சனுக்கு அணியில் இடம் அளிக்கப்படவில்லை. அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மனாக ரிஷப் பண்ட் செயல்பட்டார்.

அதனால், இந்த டி20 தொடரில் மீதம் இருந்த இரண்டு போட்டிகளிலும் சஞ்சு சாம்சனுக்கு இந்திய அணியின் பிளேயிங் லெவனில் வாய்ப்பு கிடைக்காது என கூறப்பட்டு வந்தது. ஆனால், இரண்டாவது டி20 போட்டியில் அணியின் துணை கேப்டன் சுப்மன் கில் நீக்கப்பட்டார். அவருக்கு பதிலாக சஞ்சு சாம்சன் அணியில் இடம் பெற்றார். சஞ்சு சாம்சன் துவக்க வீரராக இடம் பெற்றது குறிப்பிடத்தக்கது.
ஏன் இந்த மாற்றம்? என இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் டாஸ் நிகழ்வின் போது பேசினார். சுப்மன் கில்லுக்கு கழுத்தில் வலி இருப்பதாகவும், அதன் காரணமாக அவர் இந்த போட்டியில் விளையாடவில்லை எனவும் தெரிவித்தார். அதனால், சஞ்சு சாம்சனுக்கு அதிர்ஷ்டம் அடித்துள்ளது.
சிவம் துபே தனது வாய்ப்புக்காக காத்திருக்கும் நிலையில் சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. அதற்கு முக்கிய காரணம் சிவம் துபே மிடில் ஆர்டரில் மட்டுமே பேட்டிங் செய்யக் கூடியவர். ஆனால், சஞ்சு சாம்சன் டாப் ஆர்டர், மிடில் ஆர்டர் என எந்த இடத்திலும் பேட்டிங் செய்யும் திறன் கொண்டவர். அதனால், அவருக்கு துவக்க வீரராக இந்த போட்டியில் வாய்ப்பு கிடைத்துள்ளது.