பல்லேகேலே: இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோதிய மூன்றாவது டி20 போட்டியில் இந்திய அணியில் செய்யப்பட்ட சில அதிரடி விஷயத்தால் வெற்றி பெற வேண்டிய இலங்கை அணி தோல்வி அடைந்தது.
பயிற்சியாளர் கவுதம் கம்பீரின் "ஃபார்முலா" ஒன்றின் காரணமாக தோல்வி அடைய வேண்டிய போட்டியிலும் இந்தியா வெற்றி பெற்று இருக்கிறது. இந்தப் போட்டியில் 30 பந்துகளில் 30 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் இருந்த இலங்கை அணி கையில் 9 விக்கெட்களை வைத்துக் கொண்டு போட்டியை சமன் மட்டுமே செய்தது. அடுத்து சூப்பர் ஓவரில் இந்தியா எளிதாக வெற்றி பெற்றது.

இதன் பின்னணியில் கவுதம் கம்பீரின் முக்கிய முடிவு ஒன்று உள்ளது. அவர் இந்திய அணியின் பயிற்சியாளராக பதவி ஏற்ற பின் நடந்த முதல் கிரிக்கெட் தொடர் இதுதான். டி20 போட்டிகளுக்கு என அவர் தனி அணுகுமுறையை வைத்துள்ளார். டி20 அணிக்கு தனி கேப்டன் வேண்டும் என்பதில் உறுதியாக இருந்த கவுதம் கம்பீர், அடுத்த கேப்டன் என கூறப்பட்ட ஹர்திக் பாண்டியாவை கைவிட்டு, சூர்யகுமார் யாதவை கேப்டனாக ஆக்கி இருக்கிறார்.
அத்துடன் டி20 அணியில் அதிக அளவில் ஆல் - ரவுண்டர்கள் இருக்க வேண்டும். எந்த ஒரு பேட்ஸ்மனும் பந்து வீச தயாராக இருக்க வேண்டும் என்ற மனநிலையில் அவர் அணித் தேர்வை செய்தார். இந்த நிலையில் மூன்றாவது டி20 போட்டியில் கடைசி இரண்டு ஓவர்களில் 9 ரன்கள் எடுத்தால் இலங்கை அணி வெற்றி பெறும் என்ற சூழ்நிலையிலும் 19வது ஓவரை ரிங்கு சிங் வீசினார். அவர் 3 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்களை வீழ்த்தினார்.
அடுத்து கடைசி ஓவரை தானே வீசினார் கேப்டன் சூர்யகுமார் யாதவ். அந்த ஓவரிலும் இரண்டு விக்கெட்கள் வீழ்த்தப்பட்டன. ஐந்து ரன்கள் மட்டுமே கொடுக்கப்பட்டது. அதனால், போட்டி டை ஆனது. பின்னர், இந்தியா சூப்பர் ஓவரில் வெற்றி பெற்றது.
கடந்த சில ஆண்டுகளாக இந்திய அணியில் இதுபோல பகுதி நேர பந்து வீச்சாளர்களை பயன்படுத்தும் வழக்கமே இல்லாமல் இருந்தது. ஆனால், கவுதம் கம்பீர் விளையாடிய காலத்தில் இந்திய அணியில் பல பகுதிநேர பந்துவீச்சாளர்கள் இருந்தனர். அப்போது சச்சின் டெண்டுல்கர், வீரேந்தர் சேவாக், சவுரவ் கங்குலி, யுவராஜ் சிங் என பல பகுதி நேர பந்துவீச்சாளர்கள் இருந்தனர்.
யுவராஜ் சிங்கை பகுதி நேர பந்துவீச்சாளராக பயன்படுத்தித் தான் இந்திய அணி 2007 டி20 உலகக் கோப்பை மற்றும் 2011 ஒருநாள் போட்டி உலகக் கோப்பையை வென்றது குறிப்பிடத்தக்கது. அதே விஷயத்தை இப்போதும் கொண்டுவர நினைத்த கவுதம் கம்பீர் அதை சரியாக செய்து இருக்கிறார்.
இந்த தொடரின் முதல் போட்டியிலேயே மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் ரியான் பராக்கை சுழற் பந்துவீச்சாளராக முழுமையாக பயன்படுத்தினார். அவர் அந்த போட்டியில் மூன்று விக்கெட்களை வீழ்த்தி இருந்தார். அப்போதும் கடைசி ஓவரை அவருக்கு கொடுத்து ஆச்சரியத்தை அளித்திருந்தார்.
இரண்டாவது போட்டியில் கடைசி ஐந்து ஓவர்களில் மூன்று ஓவர்களை சுழற் பந்துவீச்சாளர்களே வீசினார்கள். அதுவும் ஆச்சரியத்தை அளித்தது. அடுத்து மூன்றாவது போட்டியில் கடைசி இரண்டு ஓவர்களில் ஒன்பது ரன்கள் எடுத்தால் வெற்றி என்று இக்கட்டான சூழ்நிலையிலும் அதுவரை இந்த தொடரில் பந்து வீசி இருக்காத ரிங்கு சிங் மற்றும் சூர்யகுமார் பந்து வீசி இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தார்கள்.
இது குறித்து இந்திய அணி வட்டாரத்தில் குறிப்பிடும் போது, "இதுதான் கவுதம் கம்பீர் ஃபார்முலா. இனி இந்திய அணியில் 7 அல்லது 8 பந்து வீச்சாளர்களும், ஏழு - எட்டு பேட்ஸ்மேன்களும் இருப்பார்கள். அந்த அளவுக்கு அவர் அதிக ஆல் - ரவுண்டர்களை இனி டி20 அணியில் பயன்படுத்த இருக்கிறார்" என்றனர்.