பல்லேகேலே: இந்தியா மட்டும் இலங்கை அணிகள் மோத உள்ள மூன்றாவது டி20 போட்டியில் சுழற் பந்துவீச்சாளர்களுக்கு சாதகமான சூழ்நிலை நிலவும் என தெரிய வந்துள்ளது. அதற்கு முக்கிய காரணம், போட்டி நடைபெறும் பல்லேகேலே மைதானத்தில் நேற்று முதல் கடுமையான மழை பெய்து வருவதுதான்.
போட்டி நேரத்திற்கு சில மணி நேரம் முன்பு தான் மழை சற்று குறையும் என கூறப்படுகிறது. அதுவரை சுமார் ஒன்றரை நாட்களுக்கு மைதானம் உறைகளால் மூடப்பட்டு இருக்கும். அதன் காரணமாக பிட்ச் சற்று ஈரப்பதமாக இருக்கும். அதுபோன்ற ஈரப்பதமான பிட்ச்களில் சுழற் பந்துவீச்சாளர்கள் அதிக தாக்கத்தை ஏற்படுத்த முடியும்.

இந்திய அணி அந்த சூழ்நிலையை பயன்படுத்த நினைத்தால் நிச்சயமாக மூன்று முழு நேர சுழற் பந்துவீச்சாளர்களுடன் களமிறங்க வேண்டும். முதல் இரண்டு போட்டிகளில் அக்சர் பட்டேல் மற்றும் ரவி பிஷ்னோய் மட்டுமே முழுநேர சுழற் பந்துவீச்சாளர்களாக அணியில் இடம் பெற்று இருந்தனர். ரியான் பராக் பகுதி நேர சுழற் பந்துவீச்சாளராக செயல்பட்டார்.
ரியான் பராக் முதல் போட்டியில் மூன்று விக்கெட்களை வீழ்த்திய போதும், இரண்டாவது போட்டியில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. அதனால், மூன்றாவது போட்டியில் அவரை சுழற் பந்துவீச்சாளராக நம்பாமல், முழு நேர சுழற் பந்துவீச்சாளர் ஒருவரையே அணியில் தேர்வு செய்ய வேண்டும்.
அதன்படி பார்த்தால் தற்போது வாய்ப்பு இல்லாமல் வெளியே மாற்று வீரராக அமர்ந்திருக்கும் தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தரை களமிறக்கலாம். வாஷிங்டன் சுந்தர் பேட்டிங்கும் செய்வார் என்பதால் ரியான் பராக்கிற்கு மாற்றாக அவர் இருப்பார். அவர் நான்கு ஓவர்களும் பந்து வீசும் ஆற்றல் கொண்டவர்.
மேலும், பவர் பிளே ஓவர்களில் கூட வாஷிங்டன் சுந்தர் பந்து வீசும் ஆற்றல் உடையவர். எனவே, அவரை மூன்றாவது சுழற் பந்துவீச்சாளராக அணியில் தேர்வு செய்தால் இலங்கை அணிக்கு சிக்கலாக அமையும். அக்சர் பட்டேல். ரவி பிஷ்னோய் மற்றும் சுந்தர் ஆகிய மூவரும் 12 ஓவர்கள் வீசினால் நிச்சயமாக இலங்கை அணி தடுமாற வாய்ப்பு உள்ளது.