பல்லேகேலே: இந்தியா - இலங்கை அணிகள் இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரின் கடைசி போட்டி நாளை (ஜூலை 30 அன்று) நடைபெற உள்ளது. இந்த போட்டியில் சஞ்சு சாம்சன் இந்திய அணியில் இருந்து நீக்கப்படுவார் என கூறப்படுகிறது.
அவர் இந்த தொடரின் முதல் போட்டியில் வாய்ப்பு பெறவில்லை. இரண்டாவது டி20 போட்டியில் மட்டுமே வாய்ப்பு பெற்றார். அதில் அவர் தான் சந்தித்த முதல் பந்திலேயே டக் அவுட் ஆகி மிகப்பெரிய ஏமாற்றத்தை ஏற்படுத்தினார். மேலும், இரண்டாவது போட்டியில் நீக்கப்பட்ட சுப்மன் கில் அணிக்கு திரும்ப இருக்கிறார். இதை அடுத்து சஞ்சு சாம்சன் மூன்றாவது டி20 போட்டியில் இடம் பெற மாட்டார் என கூறப்படுகிறது.

சஞ்சு சம்சனுக்கு இந்திய அணியில் இதுவரை நிரந்தரமாக வாய்ப்புகள் அளிக்கப்பட்டது இல்லை. ஒவ்வொரு தொடரிலும் சில போட்டிகளில் மட்டுமே அவருக்கு வாய்ப்பு அளிக்கப்படும். மேலும் முக்கியத்துவமற்ற தொடர்களில் மட்டுமே அவர் இந்திய அணிக்காக விளையாடி இருக்கிறார். அதிலும் ஒன்று அல்லது இரண்டு போட்டிகளில் மட்டுமே பிளேயிங் லெவனில் இடம் பெறுவார். மேலும், சஞ்சு சாம்சன் நிலையாக ஒரே பேட்டிங் வரிசையில் ஆடியதில்லை. அவர் 1 முதல் 7 வரையிலான பேட்டிங் வரிசையில் களமிறங்கி இருக்கிறார்.
இந்த நிலையில், இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் துணை கேப்டன் சுப்மன் கில் கழுத்து வலியால் ஆட முடியாத நிலை ஏற்பட்டதால், சஞ்சு சாம்சன் துவக்க வீரராக வாய்ப்பு பெற்றார். ஆனால், அவர் முதல் பந்திலேயே டக் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார். தற்போது மூன்றாவது டி20 போட்டியில் சுப்மன் கில் அணிக்கு திரும்ப இருப்பதால் சஞ்சு சாம்சன் மீண்டும் அணியில் இருந்து நீக்கப்பட உள்ளார்.
இது குறித்து ரசிகர்கள் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர். "தொடர்ந்து இரண்டு, மூன்று தொடர்களில் வாய்ப்பு அளித்தால்தான் அவர் சரியாக விளையாடுகிறாரா? இல்லையா? என்பதே தெரிய வரும். ஒவ்வொரு தொடரிலும் ஓரிரு போட்டிகளில் மட்டும் வாய்ப்பு அளித்துவிட்டு, அவரை அணியிலிருந்து நீக்குவது சரி அல்ல" என விமர்சித்து வருகின்றனர் ரசிகர்கள்.
மேலும், "அணியின் முதன்மை விக்கெட் கீப்பராக இருக்கும் ரிஷப் பண்ட் இதுவரை 76 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடி இருக்கிறார். அதில் அவரது பேட்டிங் சராசரி 23 மட்டுமே. அவரது ஸ்ட்ரைக் ரேட் 127 மட்டுமே. இது ஒன்றும் சிறப்பான செயல்பாடு இல்லையே" என பண்ட் செயல்பாட்டை சுட்டிக் காட்டி சாம்சனுக்கு அணியில் தொடர்ந்து வாய்ப்பு அளிக்க வேண்டும் என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.