பல்லேகேலே: இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் மோதி வருகின்றன. முதல் இரண்டு போட்டிகள் முடிந்த நிலையில் மூன்றாவது போட்டி இன்று பல்லேகேலேவில் நடைபெற உள்ளது. இந்த போட்டி நடைபெற உள்ள நேரத்தில் மழை பெய்யும் என வானிலை அறிக்கை வெளியாகி உள்ளது. அதனால், இந்த போட்டி முழுமையாக நடைபெறுமா அல்லது போட்டி ரத்து செய்யப்பட வாய்ப்பு உள்ளதா? என்ற கேள்விகள் எழுந்துள்ளன.
பல்லேகேலே மைதானத்தில் தான் இந்த டி20 தொடரின் மூன்று போட்டிகளும் நடைபெறும் வகையில் அட்டவணை தயார் செய்யப்பட்டுள்ளது. முதல் இரண்டு போட்டிகளும் அதே மைதானத்தில் தான் நடந்தது. முதல் போட்டி முழுமையாக நடைபெற்ற நிலையில், இரண்டாவது போட்டியில் இந்தியா சேஸிங் செய்த போது மழை குறுக்கிட்டது.

அதனால், இந்தியாவுக்கு எட்டு ஓவர்களில் 78 ரன்கள் என வெற்றி இலக்கு மாற்றி நிர்ணயிக்கப்பட்டது. தற்போது மூன்றாவது டி20 போட்டி நடைபெறும் போதும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை அறிக்கை வெளியாகி உள்ளது. நேற்று (ஜூலை 29 அன்று) கடும் மழை பெய்ததாக கூறப்படுகிறது. அதனால், ஆடுகளம் முழுவதும் உறைகளால் மூடப்பட்டு இருந்தது.
இன்று (ஜூலை 30) போட்டி நடைபெறும் நேரத்தில் 10 சதவீதம் அளவுக்கு மழை பெய்யும் எனக் கூறப்படுகிறது. அதே சமயம், காலை நேரத்தில் சற்று அதிகமான மழை பெய்யும். எனவே காலை நேரத்தில் ஆடுகளம் முழுமையாக மூடப்பட்டு இருக்கும். போட்டி நடைபெறும் நேரத்தில் இப்போது அவ்வப்போது மழை பெய்ய வாய்ப்புள்ளது.
அதிர்ஷ்டம் இருந்தால் இந்த போட்டி முழுமையாகவும் நடைபெறலாம் அல்லது இரண்டாவது போட்டி போல அவ்வப்போது மழையால் போட்டி தாமதமாகக் கூடும். அப்படி நடந்தால், இந்தப் போட்டி ஓவர்கள் குறைக்கப்பட்டு நடத்தப்படும். மூன்றாவது டி20 போட்டி ரத்தாக வாய்ப்பு குறைவாகவே உள்ளது. இந்திய அணி ஏற்கனவே இந்த தொடரை 2 - 0 என கைப்பற்றி விட்டதால் மூன்றாவது போட்டி ரத்தானாலும் இந்தியாவுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.