மும்பை: இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி 3 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்கவுள்ளது. இதற்கான இந்திய அணி தேர்வு இன்று நடக்கவுள்ளது. அதுமட்டுமல்லாமல் பயிற்சியாளர் கவுதம் கம்பீருக்கு முதல் பயணம் என்பதால், ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.
இதனிடையே இந்திய தேர்வுக் குழு தலைவர் அஜித் அகர்கர் மற்றும் தேர்வுக் குழு உறுப்பினர்களுடன் வீடியோ கால் மூலமாக பயிற்சியாளர் கவுதம் கம்பீர் ஆலோசனை நடத்தியுள்ளார். இந்த ஆலோசனை கூட்டத்தில் பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷாவும் இருந்திருக்கிறார். எப்படியான வீரர்கள் தேவை, இந்திய அணியை கட்டமைப்பதற்கான திட்டங்கள் குறித்தும், எதிர்காலம் குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில் இலங்கை டி20 மற்றும் ஒருநாள் தொடருக்கான இந்திய அணியின் தேர்வு அஜித் அகர்கர் குழுவினருக்கு தலைவலியை கொடுத்துள்ளது. ஏனென்றால் தேர்வு குழு முன் 5 முக்கியமான கேள்விகள் உள்ளது. அந்த 5 கேள்விகளுக்கு இந்திய அணி அறிவிக்கப்படும் போது பதில் கிடைத்துவிடும். ஆனால் அந்த கேள்விகளுக்கு அஜித் அகர்கர் குழு எப்படி பதில் அளிக்கும் என்ற எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.
முதல் கேள்வி என்னவென்றால் நட்சத்திர வீரர் ரிஷப் பண்ட் மீண்டும் ஒருநாள் அணியில் தேர்வு செய்யப்படுவாரா என்பது தான். ஏனென்றால் டி20 உலகக்கோப்பை தொடரில் முதன்மை விக்கெட் கீப்பராக ரிஷப் பண்ட் செயல்பட்டார். ஆனால் ஒருநாள் கிரிக்கெட்டை பொறுத்தவரை கேஎல் ராகுல் விக்கெட் கீப்பராக இருக்கிறார். அதேபோல் தென்னாப்பிரிக்கா ஒருநாள் தொடரின் சஞ்சு சாம்சன் சதம் விளாசி தனது திறமையை நிரூபித்துள்ளார்.
ஒருவேளை ரிஷப் பண்ட் கம்பேக் கொடுத்தால் மீண்டும் சஞ்சு சாம்சன் பெஞ்சில் இருக்க வேண்டும். 2வது கேள்வி என்னவென்றால் இந்திய டி20 அணியின் அடுத்த கேப்டன் யார் என்பது தான். ஏனென்றால் 2022ஆம் ஆண்டு முதல் இந்திய அணி விளையாடியுள்ள 79 டி20 போட்டிகளில் ஹர்திக் பாண்டியா 46 போட்டிகளில் மட்டுமே விளையாடி இருக்கிறார். ஆனால் சூர்யகுமார் யாதவ் பெரும்பான்மையான ஆட்டங்களில் விளையாடியதோடு, கேப்டனாகவும் செயல்பட்டுள்ளார். காயம், ஃபிட்னஸ் உள்ளிட்ட பிரச்சனை இருப்பதால், யார் அடுத்த கேப்டன் என்ற கேள்வி உள்ளது.
3வது கேள்வி என்னவென்றால் இந்திய டி20 அணியின் டாப் ஆர்டர் எப்படி இருக்கும் என்பது தான். ஏனென்றால் ரோகித் சர்மா, விராட் கோலி ஓய்வு பெற்றுள்ள நிலையில், ஜெய்ஸ்வால், சுப்மன் கில், ருதுராஜ் கெய்க்வாட், ரிஷப் பண்ட், அபிஷேக் சர்மா, சஞ்சு சாம்சன் என்று ஏராளமான வீரர்கள் வரிசையில் உள்ளனர். இதில் சூர்யகுமார் யாதவும் நம்பர் 3ல் விளையாடக் கூடிய வீரர் தான். இதில் எந்த வீரரை கழற்றிவிடப் போகிறார்கள் என்பது தான் மிகப்பெரிய கேள்வியாக உள்ளது.
அதேபோல் 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு முன் சில ஒருநாள் போட்டிகளிலேயே இந்திய அணி விளையாடவுள்ளது. இதனால் இலங்கை அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்திய சீனியர் வீரர்கள் விளையாடுவார்களா என்ற கேள்வி உள்ளது. பயிற்சியாளர் கவுதம் கம்பீர் கேட்டு கொண்டுள்ளதால், ரோகித் சர்மா ஒருநாள் தொடரில் விளையாட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் விராட் கோலி, பும்ராவுக்கு ஓய்வு கொடுக்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
கடைசி கேள்வி என்னவென்றால் உலகக்கோப்பை தொடரில் சிறப்பாக செயல்பட்ட ஸ்ரேயாஸ் ஐயர் ஒழுங்கு நடவடிக்கை காரணமாக இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்டார். தற்போது கேகேஆர் அணியின் கேப்டனாக சாம்பியன் பட்டம் வென்றுள்ளதால், இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் ஸ்ரேயாஸ் ஐயர் சேர்த்து கொள்ளப்பட வாய்ப்புள்ளதா என்ற கேள்வி எழுந்துள்ளது. அவர் கம்பேக் கொடுத்தால், சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு கிடைப்பது சந்தேகம் தான் என்பதும் குறிப்பிடத்தக்கது.