மும்பை: இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான டி20 தொடர் தொடங்குவதற்கு இன்னும் சில நாட்களே உள்ளது. நாளை மறுநாள் இந்திய அணி வீரர்கள் விமானம் மூலமாக இலங்கைக்கு புறப்படவுள்ளனர். இதனிடையே டி20 மற்றும் ஒருநாள் தொடருக்கான இந்திய அணியின் அறிவிப்பும் வெளியாகியது.
ஆனால் புதிய பயிற்சியாளராக பொறுப்பேற்றுள்ள கவுதம் கம்பீரின் பயிற்சியாளர்கள் குழுவில் யார் இருக்கிறார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. ஏனென்றால் கவுதம் கம்பீர் பயிற்சியாளராக நியமனம் செய்யப்பட்ட பின், அவர் தனக்கான பயிற்சியாளர் குழுவை உருவாக்க விரும்பினார். இதற்கு பிசிசிஐ இசைவு தெரிவித்த நிலையில், அவர் சில பெயர்களையும் பரிந்துரைத்துள்ளார்.

முதல் பெயராக கேகேஆர் அணியின் துணைப் பயிற்சியாளராக அபிஷேக் நாயர் பெயர் இருந்துள்ளது. அதற்கு பிசிசிஐ உடனடியாக ஒப்புதல் தெரிவிக்க, பின்னர் பவுலிங் பயிற்சியாளராக வினய் குமார், பாலாஜி ஆகியோரின் பெயர்களை பரிந்துரைத்துள்ளார். கவுதம் கம்பீரின் இந்த பரிந்துரையை பிசிசிஐ ஏற்கவில்லை என்று தகவல் வெளியாகியது.
அதேபோல் ஃபீல்டிங் பயிற்சியாளராக ரியான் டெண்டஸ்காட்டே மற்றும் ஜான்டி ரோட்ஸ் இருவரின் பெயர்களையும் கவுதம் கம்பீர் பரிந்துரைத்த போது, பிசிசிஐ ஏற்கவில்லை என்று கூறப்பட்டது. அதுமட்டுமல்லாமல் பவுலிங் பயிற்சியாளராக மோர்னே மோர்க்கலின் பெயரும் அடிப்பட்டது. கவுதம் கம்பீரின் 5 பரிந்துரைகளுக்கு பிசிசிஐ ஒப்புதல் அளிக்காதது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
ஏனென்றால் கிட்டத்தட்ட 10 ஆண்டுகளாக இந்திய அணிக்கு இந்திய முன்னாள் வீரர்களே பயிற்சியாளர்களாக செயல்பட்டு வருகின்றனர். அதனை மாற்ற வேண்டாம் என்று பிசிசிஐ கருதியது. இந்த நிலையில் கவுதம் கம்பீர் தனது பயிற்சியாளர்கள் குழுவை முடிவு செய்து, பிசிசிஐ ஒப்புதலை பெற்றுவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, தலைமை பயிற்சியாளராக கவுதம் கம்பீர் செயல்பட, துணைப் பயிற்சியாளர்களாக அபிஷேக் நாயர் மற்றும் ரியான் டெண்டெஸ்காட்டே ஆகியோர் செயல்படவுள்ளனர். அதேபோல் ஃபீல்டிங் பயிற்சியாளராக தற்போதைய பயிற்சியாளர் டி திலீப் தொடரவுள்ளார். அதேபோல் பவுலிங் பயிற்சியாளராக மோர்னே மோர்க்கல் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.